வரலாறு காணாத சிலிண்டர் விலை உயர்வு.. அறிவிக்கப்படாத லாக்டவுன்? டீ, டிபன் சின்ன கடைகள் சுருண்டன
சென்னை: ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக ஏற்கெனவே தனியார் பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள் ரேட்டை ஏற்றியிருந்தன. இந்நிலையில், தற்போது வணிக சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, நாடு முழுவதும் ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை அதிகரித்திருக்கிறது. அதேபோல, விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்படலாம் என்கிற அச்சம் ஏற்பட்டிருப்பதால் அறிவிக்கப்படாத லாக்டவுன் சூழல் நிலவுகிறதோ என்று மக்கள் புலம்ப தொடங்கியிருக்கின்றனர்.
நான் வேலூர்காரன். லீவு நாட்களில் எங்காவது வெளியில் போகலாம் என்றால், வேலூர் கோட்டையை சுற்றிப்பார்க்க போகலாம். அடிக்கிற வெயிலில் காலையில் போக முடியாது. சாயந்திரம் போகலாம் என்றால், பைக்கில் பெட்ரோல் அடிக்க குறைந்தது ரூ.100 வேண்டும். சரி போகிற இடத்தில் டீ சாப்பிடலாம் என நினைத்தால், கேஸ் விலை ஏற்றத்தால் ரூ.12 இருந்த டீ ரூ.20 என ரேட் எகிறியிருக்கிறது.

செலவு மேல் செலவு
வெறும் டீ மட்டும் போதாதே! பஜ்ஜி சொஜ்ஜி கொரிக்க தோன்றும். எல்லாமே ரேட் ஏறியிருக்கிறது. இதனால் அப்படி இப்படினு, டீ கடையில் ரூ.100 காலியாகிவிடும். அப்புறம் வண்டியை கோட்டைக்குள் விட்டுவிட்டு சுற்றிப்பார்க்க போனால், தண்ணீர் பாட்டில், கரும்பு ஜூஸ் என ஐம்பது, நூறு செலவு இழுத்துவிடும்.
உணவு பொருட்கள்
கால் கடுக்க கோட்டையை சுற்றிவிட்டு சும்மாவா வீட்டுக்கு வருவது? நைட் டின்னரை முடித்துவிடலாம் என்று ஓட்டலுக்கு போக தோன்றும். அங்கு சிக்கன் ரைஸ் ரூ.200 என பில் போடுவார்கள். நான் மட்டும் சாப்பிட்டால் போதுமா? அம்மாவுக்கு வாங்கிப் போக வேண்டும். எல்லாம் சேர்த்தால் ஒரு நாள் சாயங்காலம் செலவுக்கு ரூ.700-1,000 வரை தேவை. ஆனால், ஒரு நாள் சம்பளமே அவ்வளவு இருக்காது. ஆக இவ்வளவு செலவு செஞ்சு வெளிய போகுறதுக்கு, பேசாம வீட்டுலேயே இருந்துடலாம். இதுதான் நாடு முழுவதும் உள்ள மக்களின் நிலை.
கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம், பெட்ரோல் விலை ஏற்றம், இதனால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு என.. அனைத்தும் சேர்த்து மக்களை வீட்டிற்குள் முடக்கியிருக்கிறது.
லாக்டவுன் சூழல்
கொரோனா காலத்தில் அரசு போட்ட லாக்டவுன் போல, இப்போது அறிவிக்கப்படாத லாக்டவுன் சூழல் உருவாகியிருப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர். பாகிஸ்தானில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்வெட்டு, விலைவாசி உயர்வு என மொத்த நாடும் திணறி வருகிறது. ஆனால், இந்தியாவில் அப்படியெல்லாம் கிடையாது என்று சொல்லி வரும் மத்திய அரசு, தற்போது கேஸ் விலை ஏற்றத்தின் மூலம் அறிவிக்கப்படாத நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஆச்சரியப்பட ஏதும் இல்லை
இப்போதைக்கு நயாரா மற்றும் ஷெல் போன்ற தனியார் பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள்தான் விலையை ஏற்றியிருக்கின்றன. ஆனால், ஏப்.29ம் தேதி மாலை அதாவது 5 மாநில தேர்தல்கள் முடிந்தவுடன் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் ரேட்டை ஏற்றும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். இன்று வரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால், விரைவில் அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்கிற நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். இப்படி இருப்பவர்களை சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலையுயர்வு கடுமையாக பாதித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications