திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு.. சிபிஐக்கு மாற்றகோரிய மனு! சென்னை ஹைகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் வழக்கினை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா (வயது 22). எம்பிஏ பட்டதாரி. ரிதன்யாவுக்கும் திருப்பூரை சேர்ந்த கவின்குமாருக்கும் திருமணம் ஆனது. இந்த நிலையில் திடீரென அப்பா வீட்டுக்கு வந்த ரிதன்யா காரில் விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை போலீசில் புகார் கொடுத்தார்.

அதில் திருமணம் ஆன சில நாட்களிலேயே வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக புகார் கொடுத்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், அவரது மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கவின்குமார் உள்பட 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் முன் ஜாமீன் பெற்றனர். இந்த நிலையில் ரிதன்யா வழக்கினை சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாதுரை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து விசாரணை அதிகாரி இந்த வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை.
கவின்குமார் செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அரசியல் தொடர்புகள் உள்ளதால் இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் அல்லது ஓய்வு பெற்ற சிறப்பு நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், வழக்கின் விசாரணை சரியான வேகத்தில் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரிதன்யாவின் கணவர் கவின்குமாரின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும், கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணைக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். மேலும் திருப்பூர் மாவட்ட எஸ்பி வழக்கு விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications