ரோகிணி திரையரங்கத்தில் தீண்டாமை.. விளக்கம் கேட்டு இருக்கோம்..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: சிம்பு நடித்த பத்து தல படத்தை பார்க்க வந்த நரிக்குற இன பெண்ணிற்கு ரோகிணி திரையரங்கம் அனுமதி மறுத்தது கடும் சர்ச்சையானது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், ரோகிணி திரையரங்கத்தில் நரிக்குறவ மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
ஓபிலி கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் கவுதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர்.

நரிக்குறவ இன மக்கள்
இந்த படத்தைப் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் இன மக்கள் வந்த போது அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கையில் டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவ இன மக்களை உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது பல்வேறு தரப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளானது. ரோகிணி திரையரங்க ஊழியர் நரிக்குறவ இனத்தவர்களை உள்ளே விட மறுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

சைகையால் வெளியே செல்லும் படி
இந்த வீடியோவில், நரிக்குறவ இன பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் படம் பார்க்க வருகை தந்தார். அந்தப் பெண் கையில் டிக்கெட்டை காண்பித்து படம் பார்க்க தியேட்டருக்குள் அனுமதிக்கும்படி பல முறை கேட்கிறார். ஆனால், திரையரங்க ஊழியர் உள்ளே விட அனுமதி மறுத்து சைகையால் வெளியே செல்லும் படி கூறும் காட்சிகள் அடங்கியுள்ளது. தியேட்டருக்கு படம் பார்க்க வந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

போலீசார் விசாரணை
அதன்பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் வெற்றி மாறன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவை அடிப்படையாக கொண்டு சென்னை கோயம்பேடு காவல் நிலைய போலீசார் தியேட்டருக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்
அப்போது குழந்தைகளுடன் வந்ததால் யு/ஏ சான்றிதழ் படம் என்பதால் அனுமதி மறுத்ததாகவும் பிறகு அவர்களை படம் பார்க்க அனுமதித்ததாகவும் தியேட்டர் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து டிக்கெட் இருந்தும் படம் பார்க்க அனுமதிக்காத ரோகிணி திரையரங்க ஊழியர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் ஆகியோர் மீது மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவ இன பெண்ணை படம் பார்க்க அனுமதி மறுத்த ரோகிணி திரையரங்கத்தின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், ரோகிணி திரையரங்க சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கூறுகையில், "சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ இன மக்களுக்கு நடந்த சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications