”டிக்கெட்டை கிழிச்சு.. திட்டி அனுப்பிட்டாங்க..” ரோகிணி தியேட்டர் விவகாரம்.. நரிக்குறவ மக்கள் வேதனை
சென்னை: ரோகிணி திரையரங்கிற்குள் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத விஷயம் இப்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு முன்பும் கூட இதேபோல தியேட்டர் நிர்வாகம் தங்களை அனுமதிக்க மறுத்ததாக நரிக்குறவ மக்கள் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல.. இந்தத் திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியானது.
கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த பத்து தல படத்திற்குப் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி படம் இன்று வெளியான நிலையில், சிம்பு ரசிகர்கள் இதை ஆர்வமாகப் பார்த்தனர்.

அனுமதி மறுப்பு
தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இந்தத் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனிடையே சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்கள் இந்த பத்து தல படத்தைப் பார்க்க வந்துள்ளனர். அவர்கள் அனைவரிடமும் டிக்கெட்கள் இருந்துள்ளன. டிக்கெட் இருந்த போதிலும், தியேட்டர் ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அங்குச் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ரசிகர்களும் மற்றவர்களும் ஏன் டிக்கெட் இருந்தும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடும் எதிர்ப்பு
அதன் பின்னரே அவர்களை தியேட்டர் நிர்வாகம் உள்ளே அனுமதித்துள்ளது. இது மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. தலைநகர் சென்னையில் இருக்கும் திரையரங்கிலேயே இப்படி சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதை ஏற்க முடியாது என்று இணையத்தில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர்கள் அனைவரும் படம் பார்ப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்ட ரோகிணி திரையரங்கு நிர்வாகம் இது குறித்து விளக்கம் ஒன்றையும் கொடுத்திருந்தது.

ரோகிணி தியேட்டர் விளக்கம்
ரோகிணி தியேட்டர் நிர்வாகம் சார்பில் கூறுகையில், 'பத்து தல' படம் யுஏ சான்றிதழ் பெற்ற படம்.. யுஏ சான்றிதழ் இருக்கும் படங்களுக்கு உரிய டிக்கெட் இருந்தாலும் 12 வயதிற்குக் குறைவான குழந்தைகளை அனுமதிக்க முடியாது. இதன் காரணமாக 2, 6, 8, 10 வயதான குழந்தைகளுடன் வந்தவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இருப்பினும், அங்கே இருந்த சிலர் இது குறித்துக் கத்த தொடங்கினர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்று அஞ்சியே அவர்களை அனுமதித்தோம்" என்று கூறப்பட்டுள்ளது.

முதல்முறை இல்லை
இருப்பினும், இந்த விளக்கத்தை நெட்டிசன்கள் பலரும் ஏற்கவில்லை. ரோகிணி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே இது குறித்து நரிக்குறவ இன மக்கள் கூறுகையில், "எங்கள் அனைவரிடமும் டிக்கெட் இருந்தது. இருப்பினும், அவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களை அவர்களுக்குப் பிடிக்கவில்லை போல, தியேட்டருக்குள் அனுமதி மறுத்துவிட்டனர். ஏற்கனவே, ஒரு முறை விஜய் படத்திற்கு இதே தியேட்டரில் டிக்கெட் இருந்த போதிலும், பாதிப் பேரை வெளியே அனுப்பிவிட்டனர்.

திட்டி வெளியே அனுப்பிடாங்க
அதேநேரம் மற்றொரு படம் ஓடும் போது எங்களை அனுமதித்தனர். இப்போது மீண்டும் அனுமதிக்க மறுத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கிறது. ஆனால், நாங்கள் இதைப் பெரிதுபடுத்துவதில்லை. விஜய், அஜித் படத்திற்குக் கூட உள்ளே விடவில்லை. வாரிசு திரைப்படத்தின் போது, டிக்கெட்டை கிழிச்சு போட்டுவிட்டுத் திட்டி வெளியே அனுப்பிட்டாங்க" என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது குறித்து கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் திரையரங்கு நிர்வாகத்திடம் இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.அதேநேரம் மற்றொரு படம் ஓடும் போது எங்களை அனுமதித்தனர். இப்போது மீண்டும் அனுமதிக்க மறுத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கிறது. ஆனால், நாங்கள் இதைப் பெரிதுபடுத்துவதில்லை. விஜய், அஜித் படத்திற்குக் கூட உள்ளே விடவில்லை. வாரிசு திரைப்படத்தின் போது, டிக்கெட்டை கிழிச்சு போட்டுவிட்டுத் திட்டி வெளியே அனுப்பிட்டாங்க" என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது குறித்து கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் திரையரங்கு நிர்வாகத்திடம் இது குறித்து விசாரணைக்குத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications