2 லட்சம் பேரிடம் கருத்து கேட்டோம்.. இந்திய வளர்ச்சிக்கு புதிய கொள்கை வழிவகுக்கும்.. பிரதமர் மோடி
சென்னை: இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும், 2 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆளுநர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பங்கு (Role of NEP-2020 in Transforming Higher Education) என்ற தலைப்பில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்வி கொள்கைக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், ஆதரவும் உள்ள நிலையில் பிரதமர் மோடி, இன்று இந்த கருத்தரங்கில் பேசினார்.
இதில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்கள் வித்தியாசமாக சிந்திப்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது.புத்தகத்தை தாண்டிய கல்வியை இந்த கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. தேசத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதில் கல்வி கொள்கையும் கல்வி முறையும் முக்கியமான பங்களிப்பு வகிக்கின்றன.
கொள்கை , எதிர்காலம், செய்முறை ரீதியான பாடத்திட்டம் மீது புதிய கல்விக்கொள்கை கவனம் செலுத்துகிறது. உலகம் வேகமாக மாறி வருகிறது. மக்கள் வேலை செய்யும் முறை, தொழில்களை செய்யும் முறை வேகமாக மாறி வருகிறது. உலகத்திற்கு ஏற்றபடி நாமும் வேகமாக முன்னேற வேண்டும்.
இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும். பாடத்திற்கு வெளியே இருப்பதையும் மாணவர்கள் கற்க வேண்டும். அதை ஊக்குவிக்கவே இந்த கல்வி முறை. 4-5 வருடங்களுக்கு முன்பே இந்த கல்வி முறையை உருவாக்க முடிவு செய்து, அதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டது. பல லட்சம் பேரிடம் இதற்காக ஆலோசனை செய்யப்பட்டது.
நாடு முழுக்க கிராமம், நகரங்களில் மக்களிடம் இதற்காக கருத்து கேட்கப்பட்டது. முறையான திட்டத்திற்கு பின்பே இந்த கல்வி முறை அமலுக்கு வந்து இருக்கிறது. இதில் 2 லட்சம் பேர் வரை தங்கள் கருத்தை தெரிவித்தனர். மக்களின் சமூக தரத்தை இந்த கல்வி முறை வெகுவாக மாற்றும். இந்த புதிய கல்விமுறை மூலம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமானதை படிக்கலாம் என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications