பினுவை போல் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி.. அலேக்காக தூக்கிய போலீஸ்
Recommended Video

சென்னை: சென்னை அயனாவரத்தில் நேற்றிரவு அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி மற்றும் அவருடைய நண்பர்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் சோலையம்மன் கோயில் மைதானத்தில் ஆட்டம் பாட்டத்துடன் இளைஞர்கள் சிலர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கிருந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து போலீஸார் விரட்டிச்சென்று, அரிவாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஆவடி அன்னனூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்கள் அயனாவரம் சுனில், நிவாஸ் ஆகிய 3 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இவர்களின் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எம்ஜிஆர் நகரில் கடந்த ஆண்டு நள்ளிரவில் கத்தியால் கேக்வெட்டி கொண்டாடி அதை வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் பூந்தமல்லி அருகே மலையாம்பட்டில் ரவுடி பினு அரிவாள் மூலம் கேக் வெட்டியதை அடுத்து போலீஸார் அவர்களை சுற்றி வளைத்ததில் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்துள்ளனர். இதில் தப்பிய பினு பின்னர் அவராகவே சரண்டராகினார்.












Click it and Unblock the Notifications