சென்னையில் அதிகாலையில் நடந்த என்கவுண்டர்.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை!
சென்னை: சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் தப்பிக்க முயன்றபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டுக்கு அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல ரௌடியான கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்து விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அரசியல் கட்சிகளும், ஆம்ஸ்ட்ராங் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கு கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரௌடி திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் கஸ்டடியில் எடுத்த 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி, அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்திற்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்தவகையில், ரௌடி திருவேங்கடம் ரெட்டேரி பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக விசாரணையில் கூறியதை அடுத்து அங்கு அழைத்துச் சென்றபோது, திடீரென ரவுடி திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாகவும், அதனால் போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications