நான் அக்யூஸ்ட்.. முடிந்தால் பிடிங்க! சென்னை போலீசுக்கு சவால் விட்ட ரவுடி.. கடைசியில் மாவு கட்டு!
சென்னை: இன்று இரவு ஒரு 'கொலை நடக்கும், முடிந்தால் என்னை பிடித்து பார்' என்று போலீசாருக்கு சவால் விட்டு பேஸ்புக் லைவில் வீடியோ வெளியிட்ட பிரபல ரவுடி ரிஷி கண்ணாவை போலீசார் எண்ணூர் அருகே மடக்கி பிடித்தனர். திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் ரிஷிகண்ணாவிடம் விசாரணை நடத்திய நிலையில், கழிவறையில் வலுக்கி விழுந்த ரிஷிகண்ணாவின் கால் முறிந்தது.
தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள். குறிப்பாக தலைநகர் சென்னையில், மாமூல் வாங்கி மிரட்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும் ரவுடிகளை பிடிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி ரிஷி கண்ணா: அந்த வகையில் திருவொற்றியூர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ரிஷி கண்ணா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில் ஒருவரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் ரவுடி ரிஷி கண்ணாவை போலீசார் தேடி வந்தனர்.
பேஸ்புக்கில் லைவ் வீடியோ: இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனாலும், ரிஷி கண்ணா சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் தான், ரிஷி கண்ணா பேஸ்புக் லைவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், போலீசாரால் தன்னை பிடிக்க முடியாது என சவால் விட்டு இருந்தார். ரிஷிகண்னா தனது வீடியோவில், "காக்கி சட்டையெல்லாம் இப்ப தலையை பிச்சிக்கிட்டு இருப்பீங்க...
ஏய் போலீசு: என்னை தேடுறதை விட்டுறுங்க. ஏன் தேடுறீங்க... நான் இருக்கிற இடத்த நானே சொன்னா மட்டும்தான் உங்களால் என்னை கண்டு பிடிக்க முடியும். ஏற்கனவே ஒரு வேட்டையை முடிச்சிட்டு இப்ப காட்டுக்குள்ள வந்திருக்கிறோம். ஏய்... திருவொற்றியூர் போலீசு... என்னையா பிடிக்க பாக்குறீங்க... இன்னைக்கு இரவுக்குள்ள ஒரு கொலை நடக்கும் பார்க்குறீங்களா..?
என்னை எதுவும் செய்ய முடியாது: நீங்க போலீசு... நான் அக்யூஸ்டு... என்னை உங்களால எதுவும் செய்ய முடியாது' என மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார் ரிஷி கண்ணா. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. போலீசாருக்கே சவால் விட்டு வீடியோ வெளியிட்டது காவல்துறையினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கழிவறையில் தவறி விழுந்தார்: இதையடுத்து, ரவுடி ரிஷி கண்ணாவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது எண்ணூர் பகுதியில் வைத்து ரவுடி ரிஷிகண்ணா போலீசாரிடம் சிக்கினான். ரிஷி கண்ணாவை திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கழிவறைக்கு சென்ற ரிஷி கண்ணா தவறி விழுந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
காலில் எலும்பு முறிவு: கீழே விழுந்ததில், ரிஷி கண்ணா காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காலில் மாவு கட்டு போடப்பட்டு ரிஷி கண்ணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரிஷி கண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர். போலீசாருக்கு சவால் விட்டு மிரட்டிய ரவுடி கழிவறையில் வழுக்கி விழுந்து மாவு கட்டு போடப்ட்ட சம்பவம் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications