2 நாள் மழையைக் கூட சமாளிக்க முடியாமல் திணறுகிறார்களே...அதிமுக ஒத்துழைக்க தயார் - ஆர் பி உதயகுமார்
எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் போனதால் இரண்டு நாள் மழைக்கே திமுக அரசு தடுமாறுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: மழை வெள்ளத்தை முன்கூட்டியே கணிக்கத் தவறியதால் இரண்டு நாள் மழையை கூட சமாளிக்க முடியாமல் திமுக அரசு திணறுவதாக முன்னாள் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் மழை பாதிப்பு காலங்களில் அம்மா உணவகங்கள் மூலமாக இலவச உணவுகள் வழங்கப்பட்டதாகவும் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுபோல பெருமழை பெய்யும் என்று எந்த வானிலை முன்அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.
சென்னை புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்தை மழை நீர் சூழ்ந்ததையடுத்து, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தை உட்பட ஐந்து நோயாளிகளை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மீட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை முழுவதும் நீர் தேங்கியுள்ளது.

சென்னையில் வெள்ள மீட்பு பணிகள்
வடசென்னை பகுதியிலும் பிரதான சாலைகள் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதேபோல புளியந்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றியும் மழை நீர் தேங்கியதால் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். மேலும் கைக்குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உதவி வேண்டி தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொண்டதையடுத்து, குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்னையும, மூதாட்டி உள்ளிட்ட 5 நோயாளிகளையும் ரப்பர் படகுகள் மூலம் தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

முன்னெச்சரிக்கை
ஒரே நாள் இரவில் கொட்டித்தீர்த்த மழையால் பல பகுதிகள் நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்பு தொடர்பாக அரசின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
Recommended Video

தத்தளிக்கும் தமிழகம்
தமிழகமே வெள்ளத்தால் தத்தளிக்கிறது. மழை காலத்தின் துவக்க நிலையிலேயே, இரண்டு நாள் பெய்த மழைக்கே சென்னை கடல் போல காட்சி அளிக்கிறது. இது மிக கவலையாக இருக்கிறது. 20 செமீ மேல் மழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னையில் தண்ணீர் தேங்கி பாதிப்பிற்கு உள்ளாகும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மழை வெள்ள பாதிப்பு
ஆய்வு கூட்டங்களை நடத்தி, அறிவிப்புகள் வெளியிட்டார் முதல்வர். ஆனால், அவை வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளனவோ என நினைக்கும் அளவில் நிலைமை உள்ளது. பல மாவட்டங்களில் நீரில் அடித்துச் செல்லப்படும் நிலை உள்ளது, அது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் மழை பாதிப்பு காலங்களில் அம்மா உணவகங்கள் மூலமாக இலவச உணவுகள் வழங்கப்பட்டன. உணவக ஊழியர்கள் சம்பள பிரச்சனையில் உள்ளனர். இதை எப்படி அரசு சமாளிக்க போகிறது? என்றும் கேள்வி எழுப்பினார்.

நிவாரண முகாம்கள்
கஜா புயல் காலத்தில் ஒரு மீனவர் கூட உயிர் இழக்கவில்லை. இரவு பகலாக கட்டுப்பாட்டு மையத்தில் தொடர்பில் இருந்து, கடந்த ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தவறி விட்டதோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. நீர் நிலைகளில் 50% நிரம்பிய பின்னர் உபரி நீர் வெளியேற்றப்படும் போது, மக்களுக்கு முறையான எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை. நிவாரண முகாம்கள் கொரோனா முகாம்களை விட மிகவும் சுகாதாரமாக, பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒத்துழைப்பு கொடுப்போம்
அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க அதிமுக தயாராக உள்ளது. பயிர் சேதம், கால்நடைகள் உயிரிழப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்டவற்றுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். மழை பாதிப்பை கணிக்க அரசு தவறி விட்டதா? மக்களை முறையாக எச்சரிக்க அரசு தவறி விட்டதா? என்றும் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

திணறுவது ஏன்
இரண்டு நாள் மழையை கூட சமாளிக்க முடியாமல் அரசு திணறுகிறது. நீர் நிலைகள், கால்வாய்களை தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. மழையை நம்மால் தவிர்க்க முடியாது, ஆனால் உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் எனவும் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications