2 வாரத்தில் மட்டும் சிக்கியது ரூ.116 கோடிப்பு… தேர்தல் பறக்கும் படையினர் சுறுசுறு
சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நடந்த வாகன சோதனையில் பணம், தங்கம், வெள்ளி என ரூபாய் 116 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 16 நாட்களில் தமிழகம் முழுவதும் சரியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக 46.29 கோடி ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்றார்.
அதேபோன்று, 212 கிலோ தங்கம், 328 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தங்கம், வெள்ளி மட்டும் 69.03 கோடி ரூபாய் மதிப்பு என்றும் கூறிய அவர், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தமிழகத்தில் 25.5 கோடி பணமும் ரூ. 51. 83 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.
2,106 பறக்கும் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட தற்போது கைப்பற்றப்பட்டுள்ள பணம் 35 கோடி ரூபாய் அதிகம் என்ற போதிலும், அடுத்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்னும் பல கோடிகள் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என கூறப்படுகிறது.