மகளிர் சுயஉதவிக்குழுக்கு ரூ.25 ஆயிரம் கோடி.. இனிப்பு செய்தி கூறிய அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பல்வேறு கிராமங்களில் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர் பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா! கவுன்சிலர்களுக்கு உத்தரவிட்ட மேயர் பிரியா ராஜன்! என்னாச்சி?
ரூ.25 ஆயிரம் கோடி
தமிழக கிராமங்களில் மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு போன்ற கட்டமைப்புகளை தாண்டி கிராம பகுதியில் மக்கள் வருவாய் ஈட்டுவதற்காக துவக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 21 ஆயிரத்து200 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சுய உதவி குழுவினருக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நிச்சயம் அதனை நிறைவேற்றுவோம்.
சமத்துவபுரங்கள்
முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் கடலூர், திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சமத்துவபுரங்களை 140 கோடி ரூபாய் செலவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அந்த சமத்துவபுரங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்படும்.
பயிற்சி மையங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் குழுக்கள் சுயமாக தொழில் செய்வதற்காக புதிய முயற்சியாக இரண்டு இடங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்துவதற்காக 1140 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் திட்டம்
மேலும் விருதுநகர்,தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களும் குடிநீர் வசதி பெரும் வகையில் மற்றொரு ஒரு திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி 2ன் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார். ஆய்வின் போது தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.