வீடு தேடி வரும் பொங்கல் பரிசு: ரூ. 2500க்கான டோக்கன் விநியோகம் தேதி அறிவிப்பு..!
ரூ.2500 பொங்கல் பரிசின் டோக்கன் விநியோக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், டிசம்பர் 26-ந்தேதியில் இருந்து டோக்கன் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அந்த வகையில், பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணையும் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்கும் திட்டத்தை நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை வருகிற 26ஆம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்படும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 13-ம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாளை முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேர் என பிரித்து டோக்கன் வழங்கப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ரூ.2,500ஐ ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். ரொக்கப் பணத்தை ரூ.2,000 மற்றும் ரூ.500 தாளாக வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில் ஐந்து 500 ரூபாய்களாக வழங்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது. ரொக்கப் பணம் அனுப்பப்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது தொடர்பாக புகார்களுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். புகார்கள் இருப்பின் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications