அறம் பட இயக்குனர் கோபி நயினார் மீது ரூ.30 லட்சம் பண மோசடி புகார்..பிரான்ஸ் தொழிலதிபர் கண்ணீர்
சென்னை: சினிமா தயாரிப்பதாக கூறி ரூ.30 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக அறம் பட இயக்குனர் கோபி நயினார் மீது இலங்கை தமிழரும் பிரான்ஸ் தொழில் அதிபருமான சியாமளா என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். குழிக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் சம்பவம் தொடர்பான இந்த திரைப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருப்பார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கோபி நயினார் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அண்ட்ரியா நடிக்கும் 'மனுசி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் மீது இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் சியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சியாமளா, சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தமிழில் படங்களை தயாரிக்க ஆசைப்பட்டேன். கடந்த 2018ம் ஆண்டு சினிமா வட்டாரங்கள் மூலம் ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜின் அறிமுகம் கிடைத்தது.
அவர் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் கருப்பர் நகரம் படத்தை தயாரித்து வருவதாகவும், அப்படத்தில் என்னை இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தெரிவித்தார்.
அதன்பின்னர் கோபி நயினாரை நேரில் சந்தித்தோம், அவரும் விஜய் அமிர்தராஜுடன் இணைந்து படம் தயாரிக்கலாம் என கூறினார். அதன்பின்னர் அவரது வாக்குறுதியை ஏற்று, பல்வேறு தவணைகளாக மொத்தம் 30 லட்சம் ரூபாயை விஜய் அமிர்தராஜிடம் கொடுத்தேன், ஐந்து லட்சத்தை கையில் பணமாக கொடுத்தேன் என்றும் சியாமளா கூறினார். ஒருநாள் படப்பிடிப்பு தொடங்கியது, ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடலாம் எனவும் படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் தெரிவித்தனர்.
அதனை நம்பி நான் பிரான்சிற்கு சென்றுவிட்டேன், சில மாதங்கள் கழித்து விஜய் அமிர்தராஜிடம் படம் குறித்து கேட்டபோது தற்காலிகாமாக படம் நிறுத்தபட்டுவிட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் இருவரும் எனது தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டனர், பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. எனவே விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளேன் என்று கூறினார்.
கோபி நயினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கோபி நயினார் பண மோசடி செய்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications