மலேசியா டூ சென்னை ஃப்ளைட்! திருதிருவென விழித்த பயணி.. சோதனையில் சிக்கிய ரூ 35 கோடி கோகைன்!
சென்னை: கம்போடியாவிலிருந்து மலேசியா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ 35 கோடி மதிப்பிலான கோகைன் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதை கடத்தியவரை விசாரணை செய்து வருகிறார்கள்.
மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கம்போடியா நாட்டில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்த ஒரு பயணியை மத்திய வருவாய் புலனாய்வு துறை போலீஸார் விசாரித்தனர். அவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அவருடைய உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை எடுத்தனர். அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்தனர். அதில் 3.5 கிலோ கோகைன் எனும் போதை பொருள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் சந்தை மதிப்பு ரூ 35 கோடியாகும். இதையடுத்து அந்த போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த நபரை வெளியே விடாமல் தனியாக வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடைய தனிப்பட்ட விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் அவருடைய பெயர் , ஊர், வயது போன்ற எந்த தகவலும் தெரியவில்லை.
நேற்றைய தினம் அதிகாலை சென்னை விமான நிலையத்தில் ரூ 28 கோடி கோகைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ 35 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சென்னையில் உள்ள பப்புகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications