ரூ.4 கோடி விவகாரம்.. பாஜக பொருளாளர் எஸ்ஆர் சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்! ஆஜராகாத கேசவ விநாயகம்
சென்னை: லோக்சபா தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர். இதில் எஸ்ஆர் சேகர் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

முன்னதாக தேர்தல் சமயத்தில் அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயிலில் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 கோடி ரொக்கப்பணத்தை 3 பேர் எடுத்து செல்வது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. பணம் எடுத்து சென்ற சதீஷ், சதீஷின் நண்பர் பெருமாள் மற்றும் நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த பணத்தை சென்னையில் இருந்து ரயில் மூலம் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்த செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தற்போது தீவிரமாக விசராணை நடத்தி வருகின்றனர். இதுவரை பாஜக பிரமுகர் கோவர்தன் உள்பட 15க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல இடங்களில் போலீசார் சோதனையும் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக கோவர்தன் வீடு, ஹோட்டலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விரைவில் நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் 2 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகருக்கு சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சம்மனில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும். இன்று காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவினர் கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர் ஆகியோர் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். தற்போது அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருப்பது என்பது ரூ.4 கோடி வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ரூ.4 கோடி நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்ற தகவல்கள் வந்த நிலையில் கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர் உள்ளிட்டோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே தான் இன்றைய தினம் எஸ்ஆர் சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மாறாக கேசவ விநாயகம் இன்னும் அஜராகவில்லை. அவர் தற்போது பாஜகவின் தேர்தல் பணிக்காக வெளிமாநிலத்தில் உள்ளதாகவும், அவர் சார்பில் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசாரிடம் கூடுதல் காலஅவகாசம் கோரப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications