அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்!
சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் கடுமையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் விளைவாக, வெறும் மூன்று நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணமும், பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அதிக அளவில் களமிறக்கப்பட்டுள்ளன.
234 தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதிக்கும் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 2,160 பறக்கும் படைகள் மற்றும் 2,160 கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, மார்ச் 18ஆம் தேதி நிலவரப்படி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ.42.65 கோடியாகும். இதில் ரூ.2.37 கோடி ரொக்கப் பணம் அடங்கும். அதேபோல், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்புள்ள உலோகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனுடன், வாக்காளர்களை கவர்வதற்காக பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் மற்றும் பிற பொருட்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் பணப் புழக்கம் மற்றும் வாக்காளர்களுக்கு சலுகைகள் வழங்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதால், அதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு கண்காணிப்பு முறைகளை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, பணம், மதுபானம், போதைப் பொருட்கள் மற்றும் இலவச பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளிக்கையில், "தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அமலாக்க அமைப்புகள் இணைந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள், வாக்காளர்களை கவரும் முயற்சிகள் ஆகியவற்றைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே இவ்வளவு பெரிய அளவில் பறிமுதல் நடைபெற்றிருப்பது, தேர்தல் ஆணையம் இந்த முறை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி வருவதை காட்டுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த கண்காணிப்பு மேலும் தீவிரமாகும் என்பதால், அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் விதிகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications