சென்னையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க மெகா திட்டம்! வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.500 கோடி
சென்னை: சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக தமிழக பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலத்தின் போது சென்னைக்குள் வெள்ளநீர் புகாத வகையில் இந்த நிதியின் மூலம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் எண்ணற்ற அறிவிப்புகள் வெளிவந்திருந்தாலும் கூட, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழக பட்ஜெட்
2022 -2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மக்களை கவரக்கூடிய பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர். வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக மட்டும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரூ.500 கோடி என்பது தற்போது முதற்கட்ட நிதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கவும் வாய்ப்புள்ளது.

மழைக்காலம்
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழந்து பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். குறிப்பாக மற்ற இடங்களை காட்டிலும் சென்னை பெருநகர மக்கள் வெள்ளத்தால் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகின. இதனிடையே இது போன்ற ஒரு நிலை மீண்டும் அடுத்த மழைக்காலத்தில் ஏற்படாத வகையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது தமிழக அரசு.

பி.டி.ஆர். அறிவிப்பு
தமிழக பட்ஜெட் தாக்கலின் போது இது குறித்து நிதி அமைச்சர் அமைச்சர் பி.டி.ஆர். வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ''சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு,தக்க பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகள் முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இப்பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.''

நேரில் ஆய்வு
இதனிடையே பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications