மேள தாளத்துடன் படம் பார்க்க உள்ளே சென்ற விஜய் ரசிகர்கள்! சப்தமே இல்லாமல் டிராபிக் போலீஸ் செய்த செயல்
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கிற்கு வந்த விஜய் ரசிகர்கள் தங்கள் பைக்குகளை ஜிஎஸ்டி சாலையிலேயே சட்டவிரோதமாக நிறுத்திவிட்டு சென்றதால் போக்குவரத்து காவல் துறை ரூ 500 அபராதம் விதித்து வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் காலை முதலே தியேட்டர் வாசலில் குவிந்துள்ளார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அதகளப்படுத்தி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியானது. அதிகாலை 4 மணி காட்சிக்கு கோர்ட் அனுமதி மறுத்ததால் தமிழகத்தில் மட்டும் காலை 9 மணிக்கு லியோ திரையிடப்பட்டது. தற்போது முதல் ஷோ முடிந்து அடுத்த ஷோ தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் தியேட்டர் இருக்கும் சாலைகள் எல்லாம் விஜய் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பல இடங்களில் போக்குவரத்தை மறித்து பட்டாசு கொளுத்துவது, டான்ஸ் ஆடுவது என விஜய் ரசிகர்கள் அலப்பறை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் வந்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இருவரும் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றனர். இந்த நிலையில் தியேட்டர் வாசலில் போக்குவரத்து காவலர் ஒருவர் ஜிஎஸ்டி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளுக்கு ரூ 500 அபராதம் விதித்து அதற்கான செல்லானை வண்டியில் வைத்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் என்னவென கேட்ட போது, ஜிஎஸ்டி சாலையில் எந்த வாகனமும் நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது. அப்படியிருக்கும் போது இவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். எனவே யார் ஜிஎஸ்டி சாலையில் வாகனத்தை நிறுத்தினாலும் அபராதம் விதிக்க வேண்டும் என கோர்ட்டில் தீர்ப்பு உள்ளது.
எனவே அபராதம் போட்டு வருகிறேன். இதுவரை 10 வண்டிகளுக்கு நோ பார்க்கிங் அபராதம் போட்டுள்ளேன். மேலும் சில வண்டிகளுக்கு போட வேண்டும். எனக்கு படம் எல்லாம் பிடிக்காது சார். இதே தியேட்டரில் ஜெயிலர் படம் ஓடியது. நான் பார்க்கவில்லை. தினமும்தான் நாங்கள் இது போல் நிற்கும் வாகனங்களுக்கு அபராதம் போட்டு வருகிறோம்.
போக்குவரத்தும் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். அபராதத் தொகை ரூ 500 சரியாகத்தான் இருக்கிறது. இந்த தொகை பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. தியேட்டரில் இத்தனை டூவிலர், இத்தனை கார் நிற்க வேண்டும் என மாநகராட்சிதான் விதிகளை வகுக்க வேண்டும். எங்களை பொருத்தவரை வாகனம் ஜிஎஸ்டி சாலையில் நின்றால் கேஸ்தான். வாகனங்களை வெளியே நிறுத்துவது குறித்து தியேட்டர் நிர்வாகத்திடம் சொன்னால் , நாங்கள் போதுமான வாகனங்களுக்கு பார்க்கிங் கொடுக்கிறோம். அது போதாமல் சாலையில் பார்க் செய்யும் வாகனங்களுக்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications