லிஸ்ட் தயாராகிறது.. பயிர்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாடு முழுக்க பயிர்க்கடன் தள்ளுபடியில் 516 கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாகவும், வழங்கப்பட வேண்டிய கடனை விட அதிக கடன் வழங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதங்கள் சட்டசபையில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து கூட்டுறவுத்துறைத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேசினார். பயிர்க்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், இதை பற்றி விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் ஐ. பெரியசாமி தனது உரையில், பயிர்கடன் தள்ளுபடியில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருக்கிறது. இதில் தரப்பட வேண்டிய கடனை விட பல மடங்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. உதராணமாக சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வழங்கப்பட்ட பயிர் கடனில் 503 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாடு முழுக்க வழங்கப்பட வேண்டிய பயிர் கடனை விட அதிகமாக கடன் வழங்கி 516 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில்தான் இந்த மோசடி அதிகம் நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக கணக்கு எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பயிர்க்கடன் என்பது சாகுபடி பரப்பளவு, சாகுபடி அளவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே வழங்கப்பட வேண்டும்.

கடன் உயர்வு
ஆனால் இதை கணக்கில் எடுக்காமல் அதிக அளவில் கடனை உயர்த்தி கொடுத்து இருக்கிறார்கள். முக்கியமாக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் சொந்த ஊரில் கூட மோசடி நடைபெற்று இருக்கிறது. அவரின் சொந்த ஊரான கோச்சடையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கடன் வழங்கப்பட்டு உள்ளது.

சேலம்
அதேபோல் சேலம் மாவட்டத்தில் 12 கூட்டுறவு வேளாண்மை வங்கியில் மொத்தம் 4.96 கோடி ரூபாய் மட்டுமே கடன் வழங்க வேண்டும். ஆனால் இங்கு விதியை மீறி மொத்தம் 2,698 பேருக்கு 16.70 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து கூடுதல் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் முறையாக கணினியில் பதிவு செய்யப்படாமல் விதி மீறல் செய்யப்பட்டுள்ளது.

லிஸ்ட்
கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் கணினிகளை சரியாக பயன்படுத்தாமல் சாம்பிராணி போட்டுள்ளனர். கடன் வழங்குவதிலும், தள்ளுபடி செய்வதிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வருகிறோம். தவறு செய்திகளின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விசாரிக்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications