நீங்க என்ன உத்தம புத்திரரா? சிபிஐ விசாரணை கேட்ட எடப்பாடி பழனிசாமிக்கு திமுக காட்டமான பதிலடி!
சென்னை: எடப்பாடி பழனிசாமியை டெண்டர் முறைகேடு வழக்கில் நீதிமன்றம் நிரபராதி என்று விடுவித்து விட்டதைப்போல பேசி வருகிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "உண்மைக்கு புறம்பான தகவல்களை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருகிறார். உண்மையை விளக்க வேண்டியது திமுகவின் கடமை. எடப்பாடி பழனிசாமி தான் உத்தம புத்திரர் போல பேசுகிறார். இபிஎஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் அவரது சம்பந்திக்கும், அவரது உறவினர்களுக்கும் முறைகேடாக நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது.
டெண்டர் முறைகேடு புகாரில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் எந்த ஒரு விசாரணையும் நடைபெறாத நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் நிரபராதி என்று தன்னை விடுவித்து விட்டதைப்போல பேசி வருகிறார். தான் ஏதோ உத்தம புத்திரர் போல ஆளுநர் மாளிகைக்கு முன் தவறான தகவல்களுடன் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. சிறப்பு புலனாய்வு விசாரணைதான் கோரினோம். சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கும் தெரியும். டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கும் தெரியும்.
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் வழக்கில் பல சிக்கல்கள் இருந்ததால் நீதிமன்றம்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதிமுக ஆட்சியில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்ட வழக்கில் இதுவரை சிபிஐ எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை. 8 ஆண்டுகள் ஆகியும் யாருடைய பணம் என சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது. விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால் தாமதமாகும் என்பதால்தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்த கேள்விகள் எழுப்பப்பட்டாலும் அவ்வப்போது பதில் சொல்லி பழக்கப்பட்ட இயக்கம் திமுக. வரலாறு தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். வழக்கறிஞரின் ஆலோசனையை பெற்று எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்றால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று அதிமுகவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சி கள்ளச்சார சாராய மரணம் மிக மோசமானது. ஆளுங்கட்சியினரின் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை.
மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. அது பலனளிக்கவில்லை. தற்போது நடைபெறும் கள்ளச்சாராய சோதனைகளை முன்கூட்டியே செய்திருக்கலாம். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" எனக் கூறி இருந்தார். அதற்கு இன்று ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications