சட்டம் ஒழுங்கை பற்றி விவாதிக்கலாம் வர்றீங்களா! எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பகிரங்க சவால்!
சென்னை: சட்டம் ஒழுங்கை பற்றியும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் தன்னுடன் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என அவர் சாடியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் 3 பேர் அரெஸ்ட் - கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!
சட்டம் ஒழுங்கு
கொடநாட்டில் உள்ள தனது தலைவியின் பங்களாவையே பாதுகாக்க முடியாதவர் எடப்பாடி பழனிசாமி என்றும் இவரெல்லாம் சட்டம் ஒழுங்கை பற்றி பேசலாமா எனவும் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார். மேலும், எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையும் செய்யமாட்டார் முதல்வர் ஸ்டாலின் என்றும் 38 குழுக்கள் அமைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கேலி செய்வதை பற்றி தங்களுக்கு கவலையில்லை எனவும் அவர் கூறினார்.
எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்
கடந்த சில நாட்களாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும் அதிமுகவிலிருந்து பலரும் திமுகவில் இணைய தயாராக இருப்பதால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். அதிமுகவினர் திமுகவில் இணைவதை அவரால் தாங்க முடியவில்லை எனத் தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என்றும் நீதிபதி சந்துரு அறிக்கையில் உள்ள அம்சங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
அருணா ஜெகதீசன் அறிக்கை
நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கை சட்டமன்றம் கூடும் போது தாக்கல் செய்யப்படும் என்றும் கோவை பேருந்து நிலைய விவகாரத்தை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோரிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்கம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சட்டம் ஒழுங்கை பற்றியும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் தன்னுடன் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என அவர் சவால் விடுத்தார்.
தந்தை மகள்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனிடம் அமைச்சர் நேரு பேசிய விதம் தந்தை மகளுக்கு இடையே நடக்கும் உரையாடலை போன்றது எனக் கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆர்.எஸ்.பாரதி. யாரைப் பற்றியும் கவலையில்லாமல் கட்சியை கைப்பற்றுவதில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தி வருவதாக கூறினார். 36 மணி நேரத்தில் 15 கொலைகள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை விடுத்த நிலையில் இன்று பதிலடி கொடுத்திருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.