கிருபானந்த வாரியாருக்கு அன்று திமுகவினரால் நடந்தது என்ன..? - அண்ணா பற்றி என்ன பேசினார் தெரியுமா?
சென்னை: கிருபானந்த வாரியாருக்கு நடந்தது பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் நடக்கும் என தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி எம்.பி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவின் உடல்நலக் குறைவின்போது, அவரை பற்றி கிருபானந்த வாரியார் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
லாங் நைட்! 4 மாதங்களுக்கு சூரியனுக்கு குட் பை சொல்லும் அண்டார்டிகா.. ஒரு துளி வெளிச்சம் இருக்காதாம்
இதைத்தொடர்ந்து கிருபானந்த வாரியாருக்கு தி.மு.கவினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவரது சொற்பொழிவுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தை தூண்டும் வகையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் இவ்வாறு பேசி வருவது சரியல்ல. அவருக்கு எச்சரிக்கை விடுகின்றேன். பழைய தி.மு.ககாரன் மீண்டும் வந்து விடுவான்.
அண்ணாவைப் பற்றி கிருபானந்த வாரியார் தவறாகப் பேசினார். அதனால் அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. அதே நிலைமைதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என எச்சரிக்கிறேன் எனப் பேசியுள்ளார்
சர்ச்சை
தி.மு.கவின் முன்னணி தலைவரான ஆர்.எஸ்.பாரதி, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிருபானந்த வாரியார் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தார். ஆர்.எஸ்.பாரதி அதைச் சொல்கிறாரா என பா.ஜ.க ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். ஆனால் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம் வேறு.
அண்ணா உடல்நலக் குறைவு
தமிழக முதல்வராக இருந்த சி.என்.அண்ணாதுரை, மிகவும் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவர் மில்லர் சிகிச்சை அளித்து வந்தார். அண்ணாவின் உடல் நலக் குறைவால் தி.மு.கவினர் உணர்ச்சிகரமான நிலையில் இருந்தனர்.
அந்த காலகட்டத்தில், நெய்வேலியில் சொற்பொழிவாற்றிய கிருபானந்த வாரியார், மனித வாழ்க்கையின் நிலையாமை குறித்து அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசினார்.
வார்த்தை விளையாட்டால் விபரீதம்
எமன் வந்துவிட்டால் மரணத்தை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறிய கிருபானந்த வாரியார், எதுகை மோனைக்காக, "கில்லர் வந்துவிட்டால் மில்லர் வந்தாலும் காப்பாற்ற முடியாது" எனப் பேசினார்.
எதுகை, மோனை, சிலேடை பேச்சுக்கு பெயர்போனவரான கிருபானந்த வாரியாரின் இந்த வார்த்தை விளையாட்டு, அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மில்லரை குறிப்பிட்டது தி.மு.க தொண்டர்களுக்கு கோபமூட்டியது. அப்போதே தி.மு.க தொண்டர்கள் சிலர் வாரியாரை தாக்கியதாக கூறப்பட்டது.
சொற்பொழிவு ரத்து
அந்த நேரத்தில் கிருபானந்த வாரியாருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவர் பங்கேற்கவிருந்த சொற்பொழிவுகள் ரத்து செய்யப்பட்டன. அவரது வீட்டில் மயில் சிலை உடைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் கிருபானந்த வாரியாருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அன்றைக்கு எம்.ஜி.ஆர். தி.மு.கவில் இருந்த நிலையில், அண்ணா மீதான அபிமானத்தால் எம்.ஜி.ஆர் ரசிகர்களே கிருபானந்த வாரியாரை தாக்க முற்பட்டதாகவும் தகவல் பரவியது.
எம்.ஜி.ஆர்
இதையடுத்து கிருபானந்த வாரியாரை சமாதானம் செய்யும் வகையில் ம.பொ.சி-யிடம் யோசனை கேட்டு எம்.ஜி.ஆர் ஒரு திட்டத்தை செயல்படுத்தினார்.
எம்.ஜி.ஆர் தம் சொந்தச் செலவில் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கிருபானந்த வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆருக்கு, கிருபானந்த வாரியார் 'பொன்மனச் செம்மல்' என்னும் பட்டம் அளித்தார் என்கிறார்கள் அன்றைய வரலாற்றுத் தகவல் அறிந்தவர்கள்.