கடலூர் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் முகாம்.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கடலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காவல்துறை அனுமதியை மீறி ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தப்பட்டது. இதனால் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று பள்ளி நிர்வாகத்திற்கு காவல்துறை சார்பில் விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஹைகோர்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா என்ற தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். முகாம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

தனியார் பள்ளிக்கு விளக்க நோட்டீஸ்
இந்த முகாம் நடத்துவதற்கு காவல்துறையும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த முகாம் நடத்தியதற்காக பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீஸ் கடந்த 30ஆம் தேதி அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டுமென்று பள்ளி தாளாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விடுமுறை காலத்தில்தான் முகாம் நடத்தப்பட்டது.
பள்ளி விடுமுறை நாளில் தான்
முகாம் காரணமாக பள்ளி செயல்பாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்கள் இல்லாத நாட்களில் நடைபெற்றதால் விதி பொருந்தாது. தேசபக்தி, ஒழுக்கம் மற்றும் ஆளுமை மேம்பாட்டிற்காக முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் என்பது அரசியல் அல்லது மதம் சார்பற்ற ஒன்றாகும்.
முகாமில் பங்கேற்ற அனைவரும் சுய ஒழுக்கத்துடனும் சூர்ய நமஸ்காரம், விளையாட்டுகள், உடற்பயிற்சிகளில் ஈடுபட்டனர். ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாகவும் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாலும் உள்நோக்கத்துடன் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற முகாம் நடத்தக்கூடாது என்று போலீசாரும் அழுத்தம் கொடுக்கிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், பள்ளி வளாகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை என்று வாதிட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் மறுவிசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications