மா.செக்கள் துணைவேந்தராக நியமிக்கப்படுவார்களா? சட்ட திட்டம் சிலருக்கு தெரிவதில்லை.. சபாநாயகர் அப்பாவு
சென்னை: முதல்வர் வேந்தராக இருந்தால் கட்சிக்காரர்களை துணை வேந்தர்களாக நியமித்துவிடுவார்கள் என்று பலரும் பேசுகிறார்கள் என்றும், ஒருவரை துணை வேந்தராக நியமிக்க சட்டத்திட்டம் உள்ளது என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு அரசு கடந்த 18ம் தேதி அனுப்பியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "அரசாங்கத்தின் கீழ்தான் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன.

உயர் கல்வித்துறை அமைச்சர்தான் அதனை நிர்வகித்து வருகிறார். அப்படி இருக்கையில், வேந்தராக இருந்தால்தான் உதவி செய்வேன் என்று முதல்வர் கூறுவது தவறு. முதலமைச்சர்கள் வேந்தராக இருந்தால் மாவட்டச் செயலாளர்களை துணை வேந்தராக நியமிப்பார்கள். துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமை முதலமைச்சரிடம் சென்றால் கட்சி நிர்வாகிகள் துணை வேந்தராக வந்து ஊழல் செய்வார்கள்.
எனவே, ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இருப்பதுதான் சரி. அப்படி இல்லையென்றால் அரசியல் சாயம் பூசப்படும்" என்று பேசியிருந்தார். இந்த நிலையில், முதல்வர் வேந்தராக இருந்தால் கட்சிக்காரர்களை துணை வேந்தர்களாக நியமித்துவிடுவார்கள் என்று பலரும் பேசுகிறார்கள் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி தான் நியமிக்க முடியும் என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
முதல்வரை வேந்தராக நியமனம் செய்தால், மாவட்ட செயலாளர்கள் எல்லாம் துணை வேந்தர்களாக ஆகிவிடலாம் என்று சொல்கிறார்கள். அதில் என்ன புரிதல் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம், ஆளுநராக வரலாம். மக்கள் தேர்ந்தெடுத்தால் முதல்வராக வரலாம். மத்திய அரசு தேர்ந்தெடுத்தால் ஆளுநர். அவர்கள் சுட்டிக்காட்டினால் ஆளுநர். அவர்கள் வேந்தராக வரலாம். வந்துவிடலாம்.
ஆனால் துணை வேந்தர் ஆக வர வேண்டும் என்றால், உன் படிப்பு என்ன? பிஎச்டி படித்திருக்கிறாயா? அதற்கு மேல் என்னென்ன படிப்புகள் படித்திருக்கிறாய்.. எத்தனை ப்ராஜெக்ட் செய்திருக்கிறாய்.. எத்தனை வருடம் பேராசியராக பணியாற்றியிருக்கிறாய்.. என இதையெல்லாம் பார்த்து, பல்கலைக்கழக துணை வேந்தருக்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி தான் நியமிக்க முடியும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.












Click it and Unblock the Notifications