சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்கிற்கே பெரிய பிரச்சனையாக உள்ளன.. முதல்வர் ஸ்டாலின் வேதனை!
சென்னை: சமூக வலைதளத்தில் பரவும் வதந்திகள் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. சமூக வலைதளத்தில் பரவக்கூடிய வதந்திகளைத் தடுக்க மிகுந்த கண்காணிப்போடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என
தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தென் மாநில காவல்துறை இயக்குநர்கள், படைத்தலைவர்கள் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை ஆற்றினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "போதைப்பொருள் புழக்கம் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா பயிரிடுதல் தடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்தவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமின்றி, அவர்கள் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் இல்லா மாநிலமாக திகழ நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குற்றவாளியை கைது செய்ய வரும் போது, தமிழக போலீசாருக்கு பிற மாநில போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழக காவல்துறைக்கு அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை. குற்றவாளிகள் மீதான பொருளாதார நடவடிக்கையால் அவர்கள் பலவீனம் அடைவார்கள். போதைப்பொருள் ஒழிப்பிற்பிக்கு எதிரான தீவிர சட்ட நடவடிக்கைக்கு காவல்துறையின் ஒருங்கிணைப்பு முக்கியம்.
கேரள போலீஸ் ஒத்துழைப்போடு அண்மையில் நாமக்கல் அருகே ஏ.டி.எம் கொள்ளையர்கள் பிடிபட்டனர். இந்த சம்பவத்தில் பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள். போதைப்பொருளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீதான பொருளாதார நடவடிக்கை எடுப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இணையதள குற்ற தடுப்பில் பல்வேறு மாநில போலீசார் இணைந்து செயல்பட வேண்டும்.
சமூக வலைதளத்தில் பரவும் வதந்திகள் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. 1390 குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பிடிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதள வதந்திகளை கண்காணித்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறியத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அமைதியான மாநிலம், அங்கு அமைதியின்மையை உருவாக்க எதையாவது பரப்புவீர்களா என யூடியூபர் வழக்கு ஒன்றில் சமூக வலைதளத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாகச் சாடியுள்ளார். சமூக வலைதளத்தில் பரவக்கூடிய வதந்திகளைத் தடுக்க மிகுந்த கண்காணிப்போடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications