Operation Rescue: களத்தில் குதித்த தமிழக அரசு! உக்ரைன் தமிழர்களை மீட்க வைத்துள்ள பிளான்! பின்னணி
சென்னை: உக்ரைனில் போருக்கு இடையே சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு முக்கியமான Rescue Operation ஒன்றை கையில் எடுத்துள்ளது.
உக்ரைனில் தற்போது போர் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு ரஷ்யா கடுமையான வான்வெளி, ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஏவுகணைகள், பீரங்கிகள், குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலர் படிக்கிறார்கள்
உக்ரைனில் தமிழர்கள் பலர் படிக்கிறார்கள், அங்கு மருத்துவ படிப்புகளுக்கு செலவு குறைவு என்பதால் தமிழர்கள் பலர் சென்றுள்ளனர். முக்கியமாக நீட் தேர்வு வருகைக்கு பின் இங்கு வாய்ப்பை இழந்த கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் குறைந்த செலவு என்பதால் உக்ரைனை தேர்வு செய்து படிக்கின்றனர். அங்கு இவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் போர் காரணமாக இவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர்.

எத்தனை பேர்
உக்ரைனில் 5000க்கும் பேருக்கும் அதிகமான தமிழர்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரும் மாணவர்கள் கிடையாது. இதில் கிட்டத்தட்ட 3000 பேர் மாணவர்கள். மீதம் உள்ள பெரும்பாலான மக்கள் அங்கே குடும்பத்தோடு வசிக்கும் தமிழர்கள். சிலர் அங்கே வேலை பார்க்கும் தமிழர்கள். சிலர் சமீபத்தில் சுற்றுலா சென்றவர்கள். இவர்கள் இப்போது அகதிகள் முகாம்களில், பங்கர்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். பலர் தமிழ்நாடு அரசிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

கோரிக்கை
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து இது தொடர்பாக பலர் அபய கோரிக்கைகளை வைத்து வந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள உக்ரைன் தமிழ் மாணவர்களின் உறவினர்களும் இதேபோல் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்தே தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.

ஏர் இந்தியா இல்லை
தற்போது இந்தியாவிடம் அதிகாரபூர்வ அரசு விமானம் இல்லை. அரசுக்கு என்று இருந்த ஏர் இந்தியா கெரியர் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இதனால் கொரோனா சமயத்தில் செய்யப்பட்டது போல சிறப்பு மீட்பு பணிகளை எளிதாக செய்ய முடியாது. மீட்பு பணிக்கு செல்ல தயாராக இருக்கும் விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதால் மத்திய அரசின் உதவியை முதல்வர் ஸ்டாலின் நாடி இருந்தார். இதில் ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்கள் இந்தியர்களை மீட்க குறிப்பிட்ட தொகையை கேட்டுள்ளது.

பயண செலவு
இந்த தொகை மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதையடுத்தே தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது மாணவர்கள், மாணவிகள், தமிழர்கள் இந்த பயண தொகையை கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் உக்ரைனில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானம் தடை
ரஷ்யா அங்கே வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக லான்ச்சர்களை வைத்து விமானங்களை உக்ரைன் அடித்து நொறுக்கி வருகிறது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் உக்ரைனில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. உக்ரைன் வான் எல்லை தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு விமானம் செல்ல முடியாது. இதையடுத்தே தமிழர்களை அருகில் உள்ள இரண்டு நாடுகளுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலை மார்க்கம்
அதன்படி சாலை வழியாக போலந்து, பெலாரஸ் கொண்டு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் தமிழர்களை சென்னைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மீட்பு Operation தற்போது தொடங்கி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள், மக்கள் தொடர்பு கொள்ள வசதியாக தமிழ்நாடு பல்வேறு போன் எண்களை அறிவித்துள்ளது. 1070, 9445869848, 9600023645, 9940256444 , வாட்ஸ்அப் எண் 9289516716, மின்னஞ்சல் [email protected], [email protected] ஆகிய தொடர்பு விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசை தொடர்பு அலுவலர்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளனர்.

செஞ்சி மஸ்தான்
இவர்களிடம் இந்த ஆப்ரேஷன் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இருந்து சாலை வழியாகின் போலந்து, பெலாரஸ் வாருங்கள். அங்கு விமானம் வரும். வந்துவிடலாம். உங்களுக்கு தெரிந்த தமிழர்களிடம் இந்த செய்திகளை பரப்புங்கள் என்று இந்த 916 பேரிடமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் மூலம் சாலை மார்க்கமாக போலந்து, பெலாரஸ் கூட்டிச்சென்று அங்கிருந்து விமானம் மூலம் மீட்க முயற்சி செய்யப்படுவதால் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி அளித்துள்ளார்.

திக்திக் பயணம்
இந்த உக்ரைன் மூலம் சாலை மார்க்கமாக போலந்து, பெலாரஸ் செல்ல நீண்ட நேரம் ஆகும். உக்ரைனில் இருந்து போலந்து செல்ல 14 மணி நேரம் ஆகும். உக்ரைனில் இருந்து பெலாரஸ் செல்ல 11 மணி நேரம் ஆகும். ரஷ்யா உக்ரைனில் தாக்கி வரும் நிலையில் சாலை பயணம் ஆபத்து என்றாலும் இவர்களுக்கு வேறு வழியில்லை. இவர்கள் போருக்கு இடையே திக் திக் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு இந்த தீவிர ஆபரேஷன் தமிழர்களை மொத்தமாக மீட்கும் வரை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications