அனிதாவை வைத்து வீபரீத "பாலிட்டிக்ஸ்".. அதிருப்தியைக் குவித்த மாஃபா.. வீழ்த்திய நாசருக்கு மணிமகுடம்!
சென்னை: நீட் தேர்வு விவகாரம், அனிதாவை வைத்து கடைசி நேரத்தில் செய்த போலி வீடியோ பிரச்சாரம் ஆகியவற்றால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியையும், வெறுப்பையும் சம்பாதித்த மாஃபா பாண்டியராஜனை, ஆவடி தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்ற சா.மு நாசருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ள திமுக.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அமைச்சரவை பட்டியலை திமுக தலைவரும் "முதல்வருமான" மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டிருந்தார். இதில் ஆவடி தொகுதியில் போட்டியிட்ட சாமு நாசருக்கு பால்வளத் துறை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரான மாஃபா பாண்டியராஜனை வீழ்த்தியதால் சாமு நாசருக்கு இந்த கவுரவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆவடி தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மாஃபா பாண்டியராஜன். விஜயகாந்துக்கு நெருக்கமான இவர் திடீரென 2013 இல் தேமுதிகவிலிருந்து விலகி அதிருப்தி எம்எல்ஏவாக செயல்பட்டு வந்தார்.

போட்டி
இதையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவில் இணைந்த மாஃபாவுக்கு ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியிட்டு வென்றார். பின்னர் ஜெயலலிதாவால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்றார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக இரண்டாக உடைந்த போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்தார். பின்னர் அதிமுக ஒன்றாக இணைந்த போது தொல்லியல் துறை மாஃபா பாண்டியராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்த போதிலும் இதற்கு காரணம் திமுக என மாஃபா பாண்டியராஜன் பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வீடியோ
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அது அனிதா அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவது போன்ற புனையப்பட்ட வீடியோவாகும். அந்த வீடியோவில் ஆண்டுக்கு 427 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்பது தமிழகத்தின் சரித்திரத்திலேயே இல்லை.

தேர்தல் பிரச்சாரம்
இந்த வாய்ப்பை ஜெயலலிதா அம்மாவோட ஆட்சிதான் தந்திருக்கும். நீட் தேர்வை கொண்டு வந்து 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின திமுகவை மன்னிச்சிடாதீங்க என அனிதா பேசுவது போன்ற புனையப்பட்ட வீடியோவை அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியிட்டிருந்தார்.

அதிருப்தி
இதை தமிழக மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அனிதாவின் அண்ணன் மணிரத்னம் அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். போலீஸில் புகாரும் கொடுத்தார். இதையடுத்து வேகமாக டிவீட்டை டெலிட் செய்தார் பாண்டியராஜன். அவரது இந்த விபரீத பிரச்சாரம் ஆவடியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிருப்தியையும், வெறுப்பையும் வாரிக் குவித்தது.

திமுக வேட்பாளர்
நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்த போது அதிமுகதான் ஆட்சியில் இருந்தது என்பதை மறந்துவிட்டு, ஜெயலலிதா வரவிடாமல் செய்த நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு திமுகவின் மீது பழி போட்ட அமைச்சர் மாஃபாவு ஆவடியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சா.மு நாசர் வென்றார். தற்போது மாஃபா பாண்டியராஜனை வீழ்த்திய சா.மு நாசருக்கு பால் வளத் துறை அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்துள்ளார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications