நான் தவெக தான்.. கலைஞர் தான் பிடித்தமான தலைவர் – மேடையில் நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: நடிகர் விஜய்யின் ஆரம்ப படங்களை இயக்கியதில் தொடங்கி, ரசிகர் மன்றங்களை வழிநடத்தியது வரை அவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நாளடைவில் அவருடன் விஜய்க்கு மாறுபட்ட கருத்து உருவானதாக தகவல் வெளியானது. தவெக தொடங்கிய பிறகு அந்த நிலை மாறியுள்ளது. இந்நிலையில் தவெக குறித்தும், கருணாநிதி குறித்தும் சந்திரசேகர் ஒரே மேடையில் பேசிய கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் தவெக என்கிற கட்சியை தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் முன்வைத்து விஜய் அரசியல் செய்கிறார். விஜய் அரசியலுக்கு வரவேற்பு இருந்தாலும், விமர்சனங்களும் அதிகளவு உள்ளது. கள அரசியலில் தவெக கோட்டை விடுவதாக விமர்சனம் எழுந்து வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக, விஜய் மீது அதிகளவு விமர்சனம் எழுந்தது.

எதற்கு பயம்
தவெகவில் சரியான இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை. விஜய்யுடன் இருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள். எனவே விஜய் தன் தந்தை எஸ்.ஏ. சந்திசேகரை உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தவெக குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் சந்திரசேகர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது," எனக்கு வந்து இங்கு என்ன நினைக்கிறேனோ அது அப்படியே வந்து கொண்டிருக்கும். என் சினிமாவும் அப்படித்தான், சுய வாழ்க்கையும் அப்படித்தான். ஒருமுறை தான் பிறக்கப் போகிறோம் ஒருமுறை தான் இறக்க போகிறோம். இதற்கிடையில் நாம் சிறப்பாக வாழ்ந்து செல்ல வேண்டும். எதற்கு தினம் தினம் பயந்து வாழ வேண்டும். ஒருமுறை தானே சாகப் போகிறோம். எதற்கு பயப்பட வேண்டும்.
சமூக அக்கறை
என் ரத்தம் தான் இப்போது.." என்று அவர் சொல்லும்போது அரங்கத்தில் கைத்தட்டல் அதிகமானது. தொடர்ந்து பேசிய சந்திரசேகர், "என் ஜீன் தானே. எங்கேயோ போய்விட்டேன். சாரி. நல்ல உணர்வு தான் இறைவன். நல்ல மனம் தான் இறைவன். நல்லது செய்தாலும் இறைவன். அப்படித்தான் நான் நினைப்பேன். பெரியாரை படிப்பது எனக்கு பிடிக்கும். அதனால் தான் என் படங்களும் அந்த பாணியில் இருந்தன.
நமக்குள் ஒரு சமூக அக்கறை இருக்கிறது. நான் இப்போதுவரை எந்தக் கட்சியிலும் இல்லை. திருத்தம் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை நான் எந்தக் கட்சியிலும் இல்லை. இப்போது ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டேன். இப்போது நான் தவெக. இருப்பினும் எனக்கு பெரியார், அறிஞர் அண்ணாவை பிடிக்கும். அதேபோல எனக்கு கலைஞர் கருணாநிதியையும் பிடிக்கும். "என்றார். சந்திரசேகரின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications