கட்சியிலிருந்து அழைத்து கண்டித்தார்கள்! குஷ்புவிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டேன்! சைதை சாதிக் சைலண்ட்!
சென்னை: திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் பேச்சாளரான சைதை சாதிக், நடிகை குஷ்பு பற்றி பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஷ்புவிடம் கனிமொழி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை விபரீதமானதை அடுத்து இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியது.
இதனிடையே இது தொடர்பாக திமுக தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக்கிடம் ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் அளித்த விளக்கம் வருமாறு;

சைதை சாதிக் விளக்கம்
''குஷ்பு திமுகவில் இருந்தபோது அவரை பாஜக காரர்கள் பேசாத பேச்சில்லை. அந்தளவுக்கு கீழ்தரமாக பாஜகவினர் குஷ்புவை விமர்சித்துள்ளனர். பாஜக நிர்வாகி ஒருவர் சசிகலா புஷ்பாவுக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கும் வகையில் பொதுவிடத்தில் நடந்துகொண்ட போது பாஜகவிலிருந்து ஒருவரும் வாய் திறக்கவில்லை. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விழுப்புரம் பாஜக நிர்வாகி ஒருவர் சொந்தக் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார். அப்போதும் யாரும் வாய் திறக்கவில்லை.''

வி.பி.துரைசாமி
''2 நாட்களுக்கு முன்னால் கூட பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, நடிகை நயன்தாராவை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார், தாய்மையை, பெண்மையை, திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் துரைசாமி பேசியது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. இப்படி இதைப்பற்றியெல்லாம் எந்தக் கருத்தும், எதிர்ப்பும் தெரிவிக்காதவர்கள் எதையோ திசை திருப்புவதற்காக எனது பேச்சை கையில் எடுத்துள்ளார்கள். இதில் உள்நோக்கம் உள்ளது.''

குஷ்புவிடம் மன்னிப்பு
''மரியாதைக்குரிய குஷ்புவிடம் நான் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டுவிட்டேன். பேச்சுக்கு வருந்தி மன்னிப்பு கேட்ட பிறகும், அதை ஏற்பதும் ஏற்காததும் குஷ்புவின் முடிவு. கட்சியிலிருந்து என்னை அழைத்து கண்டித்தார்கள், அரசின் சாதனைகளை, நலத்திட்டங்களை பற்றி மட்டும் பேசுமாறு அறுவுறுத்தியுள்ளார்கள். நிச்சயம் அதன் படி நடப்பேன். நான் பேசவே இல்லை என்று கூறவில்லை, வாய் தவறி பேசிவிட்டேன். நான் 3 ஆண்டுகளுக்கு முன்னால் பேசிய வீடியோவை வைத்து கிஷோர் கே சுவாமி இப்போது விமர்சிக்கிறார்.''

வாய் தவறி பேசிவிட்டேன்
''இதே கிஷோர் கே சுவாமி முதலமைச்சர் ஸ்டாலினை பற்றியும், உதயநிதி ஸ்டாலினை பற்றியும், கனிமொழி அக்காவை பற்றியும் அநாகரீகமாக பேசிய வீடியோக்கள் எல்லாம் இருக்கிறது. பதிலுக்கு பதில் நானும் இப்படி செய்தால் அது பிரச்சனைக்கு தீர்வாகாது. வாய் தவறி பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பிறகும் இதையே ஏன் மீண்டும் மீண்டும் சர்ச்சையாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.'' இவ்வாறு திமுக பேச்சாளர் சைதை சாதிக் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications