அரசியலை விட்டு விலகுகிறேன்.. "அம்மா"வின் ஆட்சி தொடர பாடுபடுங்கள்.. சசிகலா திடீர் அறிவிப்பு
சென்னை: தான் எந்தவொரு பதவிக்கும் படத்திற்கும் ஆசைப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ள சசிகலா, அரசியலை விட்டு ஒதுங்குவதாகவும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையப் பிரார்த்திப்பேன் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகள் சிறையிலிருந்த சசிகலா, கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகம் திரும்பினார்.
அப்போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசியலில் சசிகலாவின் வருகை மிகப் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தான் அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி
இது குறித்தது சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் என்றும் வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

பொது எதிரி திமுக
நம்முடைய பொது எதிரி, தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்குக் காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரது தொண்டர்கள் பாடுபடவேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள்.

எதற்கும் ஆசைப்பட்டதில்லை
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

பிரார்த்தனை செய்வேன்
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications