"லவ் டுடே".. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் செல்போன் தந்த இளைஞர்.. பாய்ந்தது போக்சோ.. ட்விஸ்ட்
சென்னை: லவ் டுடே திரைப்பட பாணியில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் செல்போனை கொடுத்த இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
தன்னை உத்தமன் போல காட்டிக்கொள்வதற்காக அந்தப் பெண் கேட்காமலேயே அவரிடம் தனது செல்போனை கொடுத்து சின்னாபின்னமாகி இருக்கிறது இந்த 'சில்வண்டு'.
செல்போன் கொடுத்த இளைஞர் எந்த விஷயத்தில் அப்பெண்ணிடம் மாட்டினார்; போக்சோ வழக்கு அவர் மீது பாய்ந்தது ஏன் என்பது குறித்து இங்கு காணலாம்.
செட்டப் செல்லப்பா..மகளை திருமணம் செய்த 62 வயது டாடி! என்னம்மா நீங்க இப்டி பண்றீங்களேமா! அதுக்காகவா?
"லவ் டுடே" தாக்கம்
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு சென்றது. அந்த திரைப்படத்தின் மையக்கரு இதுதான். அதாவது, காதல் திருமணம் செய்யப் போகும் கதாநாயகனும், கதாநாயகியும் தங்கள் செல்போன்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பரஸ்பரம் மாற்றிக் கொள்கின்றனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் செய்து வந்த தவறுகள் இருவருக்கும் தெரியவருகின்றன. இதனை நகைச்சுவை கலந்து திரைப்படத்தில் சொல்லியிருப்பார் பிரதீப் ரங்கநாதன்.
சேலத்தில் ஒரு லவ் டுடே
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள வேலூர் மாதா கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (27). ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை செய்து வரும் அரவிந்துக்கும், அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது லவ் டுடே திரைப்படம் பற்றியும் அவர்கள் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரும் தங்கள் செல்போன்களை மாற்றிக்கொள்வோமா என அரவிந்த் கேட்டுள்ளார். அதன்படி, இருவரும் 2 வாரக்காலத்திற்கு அவரவர் செல்போன்களை மாற்றியுள்ளனர்.
சிக்கிய 'சில்வண்டு'
இதனைத் தொடர்ந்து, அரவிந்தின் செல்போனில் என்னென்ன புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கிறது என்பதை அக்குவேர் ஆணிவேராக அலசி பார்த்துள்ளார் அந்தப் பெண். அப்போது அவர் பார்த்த வீடியோ அவரை அச்சத்தில் உறையச் செய்தது. அந்த வீடியோவில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நிர்வாணக் கோலத்தில் இருந்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் அரவிந்தின் குரல் கேட்டுள்ளது. இதனால் அரவிந்த் தான், இந்த வீடியோவை எடுத்துள்ளார் என்பதை அப்பெண் உறுதி செய்தார்.
பாய்ந்தது போக்சோ
பின்னர், தான் இந்த வீடியோவை பார்த்ததை அரவிந்திடம் அப்பெண் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இதுகுறித்து போலீஸுக்கு அவர் தகவல் தெரிவித்தார். இந்த சூழலில், கடந்த வாரம் இரவு வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தை போலீஸார் கொத்தோடு தூக்கி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரை விசாரித்ததில், அந்த வீடியோவில் உள்ள 10-ம் வகுப்பு சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அவரை பலாத்காரம் செய்ததை அரவிந்த் ஒப்புக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அரவிந்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.