அடிக்குது ‘ஜாக்பாட்’.. உள்ளே வரும் சேலம் புள்ளி.. ஸ்டாலின் வந்ததுமே நடக்கப்போகும் முக்கிய மாற்றம்!
சென்னை: விரைவில் நடக்கப்போகும் அமைச்சரவை மாற்றத்தில் சேலத்திற்கு ஒரு இடம் நிச்சயம் எனக் கூறப்படுகிறது. சேலம் மாவட்ட திமுகவினர் மத்தியில் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்ற கோரிக்கை வெளிப்படையாகவே வலுத்திருப்பதால், எதிர்வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ராஜேந்திரன் அமைச்சர் ஆக்கப்படுவார் என திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு 17 நா: சுற்றுப்பயணமாகச் சென்றுள்ளார். அமெரிக்க பயணம் புறப்படும்போது செய்தியாளர்கள், பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பியதும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்று எழுப்பிய கேள்விக்கு, "மாற்றம் ஒன்றே மாறாதது! Wait and See" என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கா பயணத்திற்கு முன்னதாகவே தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என பேச்சுகள் தீவிரமாக உலவின. ஆனால், அமைச்சரவை மாற்றம் இல்லை என தெரிவித்துவிட்டார் ஸ்டாலின். ஆனாலும், அமெரிக்காவுக்கு கிளம்பும்போது, “வெய்ட் அண்ட் சீ” என அவர் இக்கு வைத்துப் பேசியதால், ஸ்டாலின் திரும்பி வந்ததுமே அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என விவாதிக்கப்பட்டு வருகிறது.
சில அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று அமைச்சர்களுக்கு பதிலாக 3 புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம் பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அதில் ஒருவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கும் என பேச்சுகள் உலவி வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மட்டுமே திமுக எம்.எல்.ஏவாக சேலம் மாவட்டத்தில் உள்ளார். எனவே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என திமுகவினர் பெரிதும் எதிர்பார்த்தனர்.
மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு அமைச்சர் பதவி கட்டாயம் வழங்கப்படும் என திமுக ஆட்சி அமைந்தபோதே கூறப்பட்டது. ஆனால் அப்போது அமைச்சர் பதவி ராஜேந்திரனுக்கு வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் சேலம் மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது தான். அதன் பிறகு சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு பெரிதும் காரணமாக இருந்த ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மத்திய மாவட்ட செயலாளராக உள்ள எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட திமுகவினர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர். அண்மையில் ஓமலூர் அருகே நடந்த கூட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர் பேசுகையில் சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக உள்ள அமைச்சர் கே.என்.நேரு, பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். அப்போது நம்மால் அவரிடம் பேச முடியவில்லை. அமைச்சர் இல்லை என்றால் சேலத்தில் வெற்றி பெற முடியாது. தாயிடம் தாய்ப்பால் குடித்தால் தான் வயிறு நிரம்பும். அடுத்த தாயிடம் குடித்தால் ரொம்புமா? என அவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் திமுகவினரின் குரல் தலைமைக்குச் சென்றிருக்கும் நிலையில், வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் ராஜேந்திரனுக்கு ஜாக்பாட் அடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications