ED நடத்திய ரெய்டு எண்ணிக்கை 3000! குற்றம் நிரூபிக்கப்பட்டது 0.05%! "ரமணா" பாணியில் விளாசிய ஸ்டாலின்
சென்னை: இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை மிரட்ட பாஜக கையில் எடுப்பது விசாரணை அமைப்புகளைத்தான், பாஜகவின் எதிர்க்கட்சிகளின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகள் நடந்துள்ளன என லிஸ்ட் போட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஆயுதமாக அமலாக்கத்துறை பயன்படுத்துவதாக விமர்சித்துள்ளார் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.

ஒரே ஸ்க்ரிப்ட் தான்: இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், "அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.கவின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்.
சிவசேனா எதிர்க்கிறதா? அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தைக் கைது செய்ய வேண்டும். இது, மகாராஷ்டிரா!
ஆம் ஆத்மி எதிர்க்கிறதா? டெல்லி மாநில அமைச்சர் மணீஷ் சிசோதியாவைக் கைது செய்ய வேண்டும். இது, டெல்லி!
ராஷ்ட்ரீய ஜனதா தளம் எதிர்க்கிறதா? பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வீ யாதவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு செய்ய நடத்த வேண்டும்! இது, பீகார்!
துணை முதல்வராவே ஆகிட்டார்: மேற்கு வங்கத்தில், மமதா பானர்ஜி பாஜக-வை எதிர்க்கிறார்களா, அவர்களது கட்சிக்காரர்களது இடங்களில் ரெய்டு நடத்த வேண்டும்!
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரைக் கைது செய்தார்கள். அவர் மக்களைச் சந்தித்து, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று, இப்போது துணை முதலமைச்சராகவே ஆகி விட்டார்!
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்தார்கள்.
தெலங்கானாவில் அமைச்சருக்குத் தொடர்புள்ள இடங்களில் ரெய்டு!
சத்தீஸ்கரில் முதலமைச்சர் தொடர்பான இடங்களில் ரெய்டு!
உத்தமபுத்திர பாஜக: ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மத்தியப் பிரதேசத்தில், குஜராத்தில் எல்லாம் ரெய்டு நடத்தப்படாது. ஏனென்றால், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது 'உத்தமபுத்திரன்' பாஜக. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத் துறைக்கோ, மத்தியப் புலனாய்வுத் துறைக்கோ தெரியாது.
பா.ஜ.க.வை எதிர்க்கிற அனைத்துக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டுக்குள்ளேயும் பா.ஜ.க.வோட துணை அமைப்புகள் ரெய்டு நடத்தி விட்டார்கள். அப்படி இல்லை என்றால், அதிமுக மாதிரி அடிமைகளை, இந்த விசாரணை அமைப்புகளைக் காட்டி மிரட்டி அடிபணிய வைத்து விடுவார்கள்.
வெறும் உருட்டல்: பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், முந்தைய பத்து ஆண்டுகளில் அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 112-தான். ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ.க.-வின் எதிர்க்கட்சிக்கார்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ வெறும் 0.05 விழுக்காடுதான்! மற்றபடி எல்லா ரெய்டுகளும் மிரட்டல், அரட்டல், உருட்டல்தான்.
இப்படி ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.கவில் சேர்ந்த பின்னர் 'புனிதர்கள்' ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட 'புனிதர்கள்' மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ஒரு பட்டியலையே போட்டிருக்கிறார்! ஏன் இங்கே இருக்கும் அதிமுகவே அதற்கு ஓர் உதாரணம்தான். இந்த ரெய்டுகளின் உண்மையான நோக்கம் என்பது இதுதான்." என அந்த வீடியோவில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications