திமுகவின் அதே பாணி.. தமிழக வெற்றிக் கழக விஜய்யின் சித்திரைத் திருநாள் வாழ்த்து.. இதை கவனிச்சீங்களா
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் "அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!" கூறியுள்ளார். இன்று தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திமுகவின் அதே பாணியான தை முதல் நாளையே விஜய்யும் புத்தாண்டு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கட்சியை பலப்படுத்தும் பணியை செய்து வருகிறார். திமுக ஒரு பக்கம், அதிமுக பாஜக கூட்டணி ஒருபக்கம், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று இருக்கும் நிலையில், விஜய்யும் தனியாக களம் இறங்க தயார் என்றும், வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் டிவிகேவுக்கும் தான் போட்டி இருக்கும் என்றும் கூறினார்.

இதனால் விஜய்யின் ஒவ்வொரு நகர்வுகளையும் அரசியல் கட்சிகள் கவனித்து வருகின்றன. இந்த நிலையில் பெரியாரை கொள்கை தலைவராக கொண்டதன் காரணமாக இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பலரும் இன்று சித்திரை 1 ஆம் தேதியினை புத்தாண்டாக கொண்டாடும் நிலையில், திராவிடர் கழகம், திமுக வழியில் விஜய்யும் இன்று புத்தாண்டு வாழ்த்து சொல்லாமல் சித்திரை திருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
விஜய் இது தொடர்பாக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- "அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!" என்று மட்டும் கூறியிருந்தார். இதனால் விஜய்யின் இந்த பதிவுக்கு ஏன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறவில்லை என்று கமெண்ட் தெரிவித்து வந்தனர். இதற்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அதாவது தமிழக வெற்றிக் கழகம் பொங்கல் திருநாளையே தமிழ் புத்தாண்டு என்று விஜய் கூறியதை பதிவிட்டு வருகிறார். முன்னதாக விஜய் பொங்கல் பண்டிகை அன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது விஜய் பதிவிட்டிருந்த ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:-
"உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி. உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற. நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற. அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்! அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என்று விஜய் கூறியிருந்தார்.
இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடானது, இன்று சித்திரைத் திருநாள் என்றும் பொங்கல் பண்டிகை அன்றே தமிழ்ப் புத்தாண்டு என்றும் வெளிப்படையாக அறிவித்து விட்டார். கடந்த 1935 ஆம் ஆண்டு திருச்சியில் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் போது தை முதல் நாளே தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று ஏற்றுகொள்ளப்பட்டிருந்தது. இதனை தந்தை பெரியாரும் ஏற்றுக்கொண்டிருந்தார்.
எனவே தான் விஜய்யும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி ஆட்சியின் போது, தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று மாற்றினார். ஆனால் அதற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சியின் போது இதனை மாற்றிவிட்டார். அதாவது சித்திரை 1 ஆம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications