அதிமுகவுக்கு முதல் ஆளாக ஆதரவு தெரிவித்த சமூக சமத்துவப் படை! பின்னணி என்ன?
சென்னை: ஆளுங்கட்சியான திமுகவுக்கே இன்னும் சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து கடிதங்கள் அளிக்கத் தொடங்காத நிலையில், முதல் ஆளாக எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு தேர்தலில் ஆதரவு அறிவித்து கடிதம் கொடுத்திருக்கிறார் சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிவகாமிக்கு தொகுதி கொடுக்கப்படாததே இப்போது அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்க காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் சிவகாமி என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகாமி ஐ.ஏ.எஸ்.
பெரம்பலூரை பூர்வீகமாக கொண்ட சிவகாமி 28 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணியில் இருந்திருக்கிறார். கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ள அவர், 2008 நவம்பர் மாதம் சமூக சமத்துவப் படை என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு தாமே தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் திமுகவுடன் இணக்கமாக செயலாற்றி வந்த அவருக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார் கருணாநிதி.

தேர்தலில் தோல்வி
அந்த தேர்தலில் தோல்வியை தழுவிய அவர் அதன்பின்னரும் திமுக ஆதரவு நிலைப்பாட்டிலேயே செயல்பட்டு வந்தார். இந்நிலையில் 2016 -ஐ போல் 2021 தேர்தலிலும் திமுக சார்பில் தனக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அவர் எதிர்பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அது போல் நடைபெறாததால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த சிவகாமி, இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

முறைப்படி கடிதம்
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து முறைப்படி ஆதரவு கடிதம் அளித்திருக்கிறார் சிவகாமி. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சமூக சமத்துவ படைக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஒரு சில வார்டுகள் ஒதுக்கக் கூடும் எனத் தெரிகிறது.

சிறிய கட்சிகள்
சமூக சமத்துவப் படையை தொடர்ந்து இன்னும் பல அமைப்புகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவுகளை பெற அதிமுக மேலிடம் தீவிரமாக காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வட்டார அளவில் செல்வாக்கு மிக்க அமைப்புகளை தங்கள் பக்கம் கொண்டு வர அதிமுக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications