சனாதன தர்மத்தில் அருவருக்கத்தக்க கருத்துகள்- விமர்சிக்க உரிமை இருக்கு.. ஆ.ராசா தரப்பு அதிரடி வாதம்!
சென்னை: சனாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான, அருவருக்கத்தக்க கருத்துகளை விமர்சிக்க எம்.பி. என்ற அடிப்படையில் தமக்கு உரிமை உள்ளது என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ஆ.ராசா, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டது. அரசு பொறுப்புகளில் இருப்பவர்ர்கள் முறைகேடாக சலுகைகளை அனுபவிப்பதற்கு எதிரானது கோ வாரண்டோ வழக்கு.

உதயநிதி தரப்பு வாதம்: இந்த வழக்கு விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதிடுகையில், அமைச்சர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி விட்டனர் என்று கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினாலும், அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை, நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது என்றார்.
சேகர்பாபு தரப்பு வாதம்: அமைச்சர் சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி வாதிடுகையில், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன் சேகர்பாபுவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. சனாதனம் என்பதும், இந்து மதம் என்பதும் எனக் கூறுவதை முற்றிலும் மறுக்கிறேன். சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் ஊக்குவிக்கும் சனாதன தர்மத்தை ஏற்கச் செய்யும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்வது, அரசியல் சாசனத்தை மதிக்காமல் இருக்கச் செய்வதைப் போன்றது. மனு ஸ்மிருதிக்கு எதிராக பேசுவது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக அமையும்? சதுர்மறை ஆகம சாத்திரமெல்லாம் சந்தைப் படிப்பு, நம் சொந்த படிப்போ என கேள்வி எழுப்பிய வள்ளலாரும் ஒரு இந்து தான். நிர்வாகம் என்பது மதச்சார்பற்றது; நிர்வாகமும், மதமும் வெவ்வேறானவை என தெரிவித்தார்.
ஆ.ராசா தரப்பு வாதம்: இதனைத் தொடர்ந்து இன்று ஆ.ராசா எம்.பி. தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி தமது கருத்துகளை முன்வைத்தார். அப்போது, சனாதன தர்மத்தில் சமூக நீதிக்கு எதிரான கருத்துகள் உள்ளன. அருவருக்கத்தக்க அம்சங்கள் உள்ளன. இதனை பொதுவெளியில் விமர்சித்து பேச ஒரு எம்.பி. என்ற அடிப்படையில் உரிமை இருக்கிறது. வரையறுக்கப்படாத காரணங்களை முன்வைத்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கோ வாரண்டோ உத்தரவு பிறப்பிக்க கோருவது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மைக்கே எதிரானது. ஆகையால் இந்த மனுவை ஏற்க கூடாது.












Click it and Unblock the Notifications