துண்டு துண்டாக வெட்டப்பட்டது சந்தியாவின் உடல் பாகங்களா.. தடவியல் நிபுணர்கள் சோதனை
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சந்தியா உடல் பாகங்கள் குறித்த சோதனை நடத்தப்பட்டது.
சென்னை: குப்பையில் துண்டு துண்டாக வீசப்பட்ட உடல்பாகங்கள் அனைத்தும் சந்தியாவுடையது தானா என்பது குறித்த சோதனை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 21-ம் தேதி, 2 கால்கள் மற்றும் ஒரு கை கண்டெடுக்கப்பட்டது. மிக சவாலான இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்ட பள்ளிக்கரணை போலீசார், இறந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்றும், கணவராலேயே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்றும் கண்டுபிடித்தனர்.
15 நாட்களில் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்து சிறையிலும் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் தவறான ஒழுக்கம் காரணமாகவே கொன்றதாகவும், உடற்பாகங்களை ஜாபர்கான் பேட்டை அடையாற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

6-வது நாள்
இதில் சந்தியாவின் தலை மற்றும், மற்றொரு கை உட்பட சில பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நேற்று பெருங்குடி குப்பைக்கிடங்கில் 25 அடி ஆழம் வரை தோண்ட முடிவு செய்து, 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டினர். 6-வது நாளான இன்றும் அந்த பணி மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.

மரபணு சோதனை
இதனிடையே இப்போது கிடைக்கப்பட்ட உடல்பாகங்கள் எல்லாம் சந்தியாவுடையதுதானா என்று தடவியல் துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சந்தியாவின் கை, கால்களின் திசுக்கள் எடுக்கப்பட்டு தடவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தியாவின் இடுப்பு பகுதியின் திசுக்களும் எடுக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும்
அங்கு தடயவியல் துறையினர் இன்று 2-ம் கட்ட சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். உடலில் உள்ள திசுக்களை எடுத்து அது சந்தியாவினுடையதுதானா என்று பார்க்கப்படும். கடைசியாக இந்த சோதனையின் முடிவுகள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில் சந்தியாவின் தந்தை ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொல்லும்போது, "என் மகளின் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. சந்தியாவின் கொலையில் உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications