குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயம்; போலீஸில் ஒப்படைத்த தங்க மனசுக்காரர்..குவியும் பாராட்டு..!
சென்னை: சென்னையில் குப்பையில் கிடந்து கண்டெடுக்கப்பட்ட 100 கிராம் தங்க நாணயத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கணேஷ் ராமன் என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதால் அவர்களின் எதிர்கால நலன் கருதி, 100 கிராம் தங்க நாணயத்தை வீட்டில் வாங்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் அந்த தங்க நாணயத்தை பழைய கவர் ஒன்றில் போட்டு அதை கட்டிலில் உள்ள மெத்தைக்கு அடியில் பாதுகாப்பாக இருக்கட்டும் என வைத்திருக்கிறார். இந்த தகவலை அவர் தனது மனைவி ஷோபனாவிடம் கூறவில்லை போல். இதனால் வழக்கம் போல் வீட்டையும், அறையையும் சுத்தம் செய்த ஷோபனா மெத்தைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த தங்க நாணயத்துடன் கூடிய பழைய கவரையும் குப்பையில் வீசிவிட்டார்.
பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கணவர் கணேஷ் ராமன், வீடு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்துவிட்டு சந்தேகத்துடன் அறைக்குள் சென்று மெத்தையை எடுத்து பார்த்திருக்கிறார். அங்கு அவர் அச்சப்பட்டது போலவே 100 கிராம் தங்க நாணயத்தை காணவில்லை. இதையடுத்து மனைவி ஷோபனாவை அழைத்து விவரத்தை கூறி கேட்டவுடன், குப்பையில் வீசியதாக அவர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து கணவனும் மனைவியும் காவல் நிலையத்துக்கு பதறியடித்துக்கொண்டு சென்று இது தொடர்பாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்த தம்பதியின் பதற்றத்தை தணிக்கும் வகையில் கண்டுபிடித்துவிடலாம் என ஆறுதல் கூறியிருக்கின்றனர்.
தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணையை அவர் தொடங்குவதற்கு முன்னரே, மேரி என்ற பெண் துப்புரவு பணியாளர் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை போலீஸில் ஒப்படைத்தார். அந்த நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தங்கத்தை குப்பையிலிருந்து மீட்டுக் கொடுத்த தங்க மனசுக்காரரான மேரி என்பவர் மூலமே, கணேஷ்ராமன் -ஷோபனா தம்பதியிடம் தங்க நாணயம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. வறிய நிலையிலும் பிறரது பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையாக நடந்துகொண்ட பெண் துப்புரவு பணியாளர் மேரிக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications