சரத் சரண்டர் ஆனது ஏன்? பாஜகவில் அடுத்த ராதாரவியா சரத்குமார்?
சென்னை: சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தற்குப் பின்னால் உள்ள ரகசியங்கள் என்ன? அந்த முடிவுக்கு அவர் வர என்ன காரணம் என்பது பற்றி சில தகவல்கள் கசிந்து வருகின்றன.
சமூகவலைத்தளங்களில் சரத்குமார் அவரது சமக கட்சியை பாஜகவுடன் இணைந்தது முதல் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அவர் இரவு 2 மணிக்குத் தூக்கத்திலிருந்து எழுந்து கட்சியை பாஜகவுடன் இணைப்பதைப் போன்று கனவு வந்தது. அப்படிச் செய்யலாமா? என்று மனைவி ராதிகாவிடம் கேட்டேன் என்று சொன்னது ட்ரோல் கண்டெண்ட் ஆக மாறி உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சமகவை நடத்தி வந்தபோது கிடைக்காத வெளிச்சம் பாஜகவில் இணைந்தது முதல் சரத்குமார் மீது விழுந்துள்ளது. ஆனால், அந்த வெளிச்சம் நேர்மறையாக இல்லை என்பது முக்கியம்.
சரத்குமாரின் சமக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக கூட்டணிக்குள் இருந்தது. அதற்கு முன்னதாக அவர் அதிமுகவிலேயே இருந்தார். அப்போது அவர், அதிமுகவின் தலைமை பதவியை அடையத் திட்டம் வகுத்துள்ளதாக ஒரு தகவல் பரவ, உடனே கட்சியிலிருந்து அவரும் அவரது மனைவி ராதிகாவும் நீக்கப்பட்டனர்.

அவரது கட்சியை அவர் தொண்டர்களை நம்பி நடத்தியதைவிட, மனைவி ராதிகாவை நம்பிதான் பல காலம் நடத்தி வந்துள்ளார். திமுகவில் உள்ளபோது அவரது மனைவி ராதிகாவின் செல்வாக்கினால் கட்சிக்குள் வலம் வந்தார்.
ஒரு காலகட்டத்தில் ராதிகாவுக்கு சின்னதிரை உலகத்தில் பெரிய செல்வாக்கு இருந்தது. சன் டிவியில் அவர் செல்வாக்கு மிக்க நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்து வந்தார்.
அவரது சித்தி சீரியல் சன் டிவியின் புகழை மேலும் உலகம் முழுக்க பரவச் செய்ததால், அவருக்குக் கலாநிதி மாறன் அதிக உரிமையை வழங்கி இருந்தார்.

சன் டிவியில் கலாநிதியின் தலைமுறை மாறி அடுத்து இளம் தலைமுறை உள்ளே வந்தபோது, ராதிகாவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. ஆகவே அவர் சன் டிவியை விட்டு வெளியேறினார். அப்படியே அவருக்கு திமுக குடும்பத்திற்குள் இருந்த செல்வாக்கு குறையத் தொடங்கியது.
அதன்பின்னர் அதிமுக பக்கம் மனைவியுடன் ஐக்கியமானார் சரத்குமார். அங்கேயும் சில அரசியல் சதுரங்க ஆட்டம் தொடங்கியதால், ராதிகாவை கட்சியை விட்டே ஒரு கட்டத்தில் விலக்கினார் ஜெயலலிதா.
அதன்பின்னர் சரத்குமாருக்குப் பெரிய வாய்ப்புகள் கண்முன்னே இல்லை. ஒரு காலத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிர்வாக ரீதியாகப் புகார் எழுந்தது. அந்த வங்கியை மீட்க ஒரு மீட்புக்குழு அமைக்கப்பட்டது. அதில் சரத்குமாரும் ஒரு நட்சத்திரமாக உள்ளே சென்றார். அவரது சமுக அடையாளத்தை வைத்து அந்தப் புகார் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொண்டார்.

அப்படியே அரசியல் களம் கண்ட அவர், அந்தக் காலத்தில் ஜெயலலிதாவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை 1996இல் ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்படியே திமுகவுக்குள் எண்ட்ரி கொடுத்தார்.
அங்கே அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் நின்று தோல்வியைப் பரிசாகப் பெற்றார். திமுக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தது.
2006இல் திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் அவருக்கு மோதல் வந்தது. அவரது 'ஜக்குபாய்' திரைப்படத்தில் அது தீவிரமாக வெளிப்பட்டது. இது ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பிறகு, அதிலிருந்து ரஜினி விலகவே, சரத்குமார் உள்ளே வந்தார்.
அதன்பின்னர் அவருக்கு திமுகவில் விலகி அதிமுகவுக்குச் சென்றார். அவரது மனைவியும் சென்றார். ராதிகாவை சேர்த்த வேகத்திலேயே வெளியேற்றினார் ஜெயலலிதா. கூடவே சரத்குமாரும் வெளியேறினார்.

அதன்பின்னர் 'ஜக்குபாய்' விழா தொடர்பாக மு.கருணாநிதிக்கும் சரத்குமாருக்கு சில சர்ச்சைகள் ஏற்பட்டன.
இறுதியாக வேறு கட்சிகளை நம்பாமல் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை 2007இல் தொடங்கினார் சரத்குமார். அவருக்குத் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் என்ற கனவைவிடப் பிரதமராகும் கனவே இருந்தது.
அப்படி ஒரு கனவிலிருந்த சரத்குமார், 2009இல் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீர இளவரசன் மறைந்ததை அடுத்து திருமங்கலம் தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தது.
அந்தத் தேர்தலில் தனது சமக சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்தினார். அந்த வேட்பாளர் 420 வாக்குகளைப் பெற்றார் என்பது வரலாறு. அந்தக் கட்சியின் தலைவரான சரத்குமாருக்குத்தான் பிரதமர் கனவு இருந்தது.

சரத்குமாருக்கு மிகப் பெரிய நிதியாதாரம் ராதிகாதான். இவரால் ராதிகாவுக்கு அதிக கடன் தொல்லைகள் ஏற்பட்டுவிட்டதாகக் கடந்த சில ஆண்டுகள் முன்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன்பின்னர் கட்சிக்காகத் தனது தரப்பிலிருந்து பணம் தர முடியாது என ராதிகா சொல்லி விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டன.
சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லை. பணத் தேவைகள் அதிகம். கட்சியை நிர்வகிப்பதற்குப் பெரிய பணக்காரர்களின் உதவி இல்லை. அப்படி இருந்தும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமலுடன் கூட்டணி வைத்தார். இவருக்கு 40 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதில் பாதியைத் திருப்பிக் கொடுத்தார் என்ற செய்தி வெளியாகவே, நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்தனர்.
இதனிடையே தான் கடந்த 2 ஆண்டுகளாக அவர் பாஜகவில் சேர உள்ளதாகத் தகவல் கசிந்து வந்தது. அண்ணாமலை அவர் சந்தித்து அப்போது பேசியதாகவும் தகவல் கசிந்து.
சரத்குமார் பாஜகவின் மாநிலத் தலைவர் பதவிக்கு முயல்கிறார் என பாஜகவுக்குள் சிலர் பேசி வந்தனர். இவரது கட்சியிலிருந்து பாஜக சென்ற கரு நாகராஜன் போன்றவர்கள் இவரைத் தலைவராக ஏற்பதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர் என்றும் சொல்கிறார்கள்.
கடைசியில் அண்ணாமலை தேசிய அளவில் வர வேண்டிய தலைவர் நீங்கள் எனச் சொல்லி, அவரை கட்சிக்குள் கொண்டுவந்துள்ளார். அந்தளவில் அண்ணாமலைக்கு இது வெற்றி. ஆனால் பாஜகவுக்கு இதனால் எந்த வெற்றியும் வரப் போவதில்லை.
கட்சிக்குக் கூடுதலாக ஒரு நட்சத்திர பேச்சாளர் கிடைத்திருக்கிறார். கூடவே ராதிகாவையும் சேர்த்துக் கொள்ளலாம். இவருக்கு முன்பாகவே கஸ்தூரி ராஜா, கங்கை அமரன், தீனா போன்ற நட்சத்திரங்களுக்கே பாஜகவில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற ஒரு புகார் உள்ளது.
சரத்குமாருக்கு முன்பாகவே இவரது உயிர் நண்பர் ராதாரவி பாஜகவில் இணைந்தார். அவருக்கே அங்கே மரியாதை இல்லை என்று பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். அவரைக் கேட்டிருந்தால் கூட இந்த முடிவை ராதாரவி தடுத்திருப்பார் என்கிறார்கள்.
சரத்குமாரை நடிகர் சங்கத்திற்குள் கொண்டு வந்ததே ராதாரவிதான். அவரைக் கூட கேட்காமல் சரத்குமார் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளார். அதற்குப் பின்னால் சில நெருக்கடிகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அவரது மகள் வரலக்ஷ்மியின் முன்னாள் உதவியாளர் ஆதிலிங்கம் 300கிலோ ஹெராயின் கடத்தலில் கைது செய்யப்பட்டார். இது நடந்தது 2023 ஆகஸ்ட் மாதம். அதற்காக அப்போதே வரலக்ஷ்மிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியது.
இந்த இணைப்புக்குப் பின்னால் இரவு 2 மணி கனவு மட்டும் இல்லை. வேறு சில தேவைகளும் உள்ளது. அவர் கடந்த 3 மாதங்கள் முன்பாகவே பாஜகவில் இணைய வேண்டியவர், தேர்தல் காலத்தில் இணைந்தால் சில 'ஸ்வீட்' ஆன பரிசுப் பொருள்கள் கிடைக்கும். அந்த, சமயம் பார்த்து சமக சாதித்திருக்கிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications