தொங்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அதிமுகவுக்கு ஆதரவு- சரத்குமார் சபாஷ் பேட்டி
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு சரத்குமார் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சரத்குமார் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்தின் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினர்.

முடிவு
இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய சரத்குமார், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்த பிறகு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

அதிமுகவை
இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம்.

தொங்கு நாடாளுமன்றம்
அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன். தொங்கு நாடாளுமன்றம் அமைந்துவிடக் கூடாது என்பதால் ஆதரவு அளிக்கிறோம். சிறுபான்மையினருக்கு பிரதமர் மோடி காவலராக இருக்க வேண்டும் என்றார் சரத்குமார்.

என்னா பேச்சு
ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல் சரத் பேசியிருப்பாரா. தனித்து போட்டியிடவே இவரிடம் வேட்பாளர் இருக்கிறார்களா என தெரியவில்லை. இதில் தொங்கு நாடாளுமன்றம் அமையக் கூடாது என்பதற்காக ஆதரவு அளிக்கிறேன் என கூறுவது அவருக்கே ஓவராக தெரியவில்லை என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications