மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் நாளைக்குள் தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகும் என சரத்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் அழைப்பு விடுக்கப்படாததால் அக்கூட்டணியிலிருந்து வெளியேறினார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். அது போல் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் வெளியேறியது.
இதையடுத்து சரத்குமாரும், ரவி பச்சமுத்துவும் இணைந்து ஒரு அணியாக செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
சமத்துவ மக்கள் கட்சி
ஆனால் கமல்ஹாசன் கூட்டணி குறித்து எதையும் குறிப்பிடவில்லை. இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்க ஒப்புக் கொள்வதாக சரத்குமார் அறிவித்திருந்தார்.
ரவி பச்சமுத்து
இதற்கு கமல்ஹாசன் நன்றி கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் கமல்ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சரத்குமாரும் ரவி பச்சமுத்துவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தொகுதி பங்கீடு
இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், நாளைக்குள் தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகும். நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அனைத்து கட்சிகளிலும் தொகுதி பங்கீடு குறித்து பேச குழுவினர் உள்ளனர்.
நல்ல மாற்றம்
அவர்கள் பார்த்து நல்ல முடிவை எடுப்பர். நல்ல மாற்றம் ஏற்படும் என தெரிவித்தனர். நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. எனவே மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சரத்குமார், ரவி பச்சமுத்து ஆகியோர் கூட்டணி அமைக்கிறார்கள் என்றே தெரிகிறது.