நள்ளிரவில் சொகுசு காரில் அதிகவேகத்தால் விபத்து.. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் மீது வழக்குப்பதிவு
சென்னை: நள்ளிரவில் நண்பர்களுடன் சொகுசு காரில் ரேஸ் வைத்ததாகவும், அந்த ரேஸின் போது அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாகவும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் மீது பாண்டி பஜார் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் இரவு அண்ணா சாலையில் விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்ட பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சபாபதி ரத்தினத்தின் 27 வயது மகன் யோகேஸ் ரத்தினம் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னை அண்ணா சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ அருகே அண்ணா மேம்பாலம் நோக்கி சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வந்து பெங்களூருரைச் சேர்ந்த பிரபு, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாண்டி பஜார் போலீசார் அவர்களை போலீசார் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு எப்படி விபத்து நடந்தது என்பது பற்றி விசாரித்தனர். அப்போது சொகுசு காரை அதி வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது புரசைவாக்கம் மற்றும் திநகர் பகுதியில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சபாபதி ரத்தினத்தின் மகன் யோகேஸ் ரத்தினம் என்பது விசாரணையில் தெரியவந்தது. நண்பர்களுக்குள் நடந்த போட்டியின் காரணமாக இரண்டு கார்களையும் வேகமாக ஓட்டிய போது இந்த விபத்து நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார், சபாபதி ரத்தினத்தின் மகனான யோகேஸ் ரத்தினத்தின் மீது மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுவது, மனித உயிர்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய செயல் செய்தல், கவனக் குறைவாக செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் யோகேஸ் இதே காரில் கடந்த ஏப்ரல் மாதம் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் அதற்கு 500 அபராதம் விதித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அபராதத்தை கட்டாததும் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே யோகேஸ் ரத்தினம் வாகனத்தை மதுபோதையில் இயக்கினாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications