சீனுக்கு வந்து சீறிய சசிகலா.. அண்ணாமலை அரசியல் அனுபவம் இல்லாத குழந்தையாம்! எதே.. சின்னப்புள்ளத்தனமா?
சென்னை: மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசிய அண்ணாமலையை அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என்று சாடி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் சசிகலா.
அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது, "இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சுக்களை புறந்தள்ளுங்கள். கழகத்தொண்டர்கள் அனைவரும் மக்கள் பணிகளை முன்னெடுப்போம்.
"மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், அவதுறாக பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. திரு. அண்ணாமலை அவர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள் எதுவும் தெரியவில்லை.

இன்றைக்கும் தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களை தங்களது முன் மாதிரியாக வைத்துக்கொண்டு தங்கள் வாழ்வில் ஒவ்வொரு படிகளையும் கடந்து பல்வேறு வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களை ஆறு முறை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை. ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்வார்களோ அதேபோன்று இந்த தமிழக மக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாய்க்கு தாயாக இருந்து பார்த்து பார்த்து செய்து விட்டார்கள்.
தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் அம்மா அவர்களுக்கு என்றைக்கும் அழிவே இல்லை. அவர் உடலால் நம்மை விட்டு மறைந்து இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக என்று ஏதாவது ஒரு ரூபத்தில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்பற்றியெல்லாம் எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

ஆனால், அதே சமயம் அம்மா உணவகம் தந்து ஏழை எளிய சாமானிய மக்களின் பசியை போக்கி அன்னலட்சுமியாக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால், அவர் சார்ந்த இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது.
இது போன்ற கருத்துக்களால் திமுகவினர் வேண்டுமென்றால் மகிழ்ச்சியடையலாம். ஆனால், தமிழக மக்கள் யாரும் அண்ணாமலையின் பேச்சை ரசிக்கவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளமுடியாத திமுகவினர் தனிப்பட்ட முறையில் பொய்யாக புனைந்த வழக்குகளையெல்லாம் முறியடித்து மக்களின் நன்மதிப்பை அம்மா அவர்கள் பெற்றார் எனபதுதான் வரலாறு.
எனவே, பொறுப்பற்றவர்கள் பேசும் இது போன்ற பயனற்ற பேச்சுக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, "மக்கள் அளித்த தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு" என்பதை மனதில் வைத்து, மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம். ஒருங்கிணைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி தமிழக மக்களை காத்திடுவோம் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications