நான் எப்போதும் ஜெயலலிதாவின் அரசியல் விஷயங்களில் தலையிட்டதே இல்லை.. சொல்வது சசிகலா!
சென்னை: நான் எப்போதுமே அக்காவின் அரசியல் விஷயங்களில் தலையிட்டதே இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: தமிழக நலனுக்காகவும் மகளிரின் மேம்பாட்டுக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்கள் நலன் மற்றும் வர்த்தகம் தழைத்து ஓங்க, உறுதியான நிலைபாட்டுடன் திறமையான ஆட்சியை தமிழகத்தில் அக்கா புரிந்து வந்தார்.
மத்திய அரசின் பல திட்டங்கள், தமிழக மக்களின் நலனை பெருமளவில் பாதிக்கும் எனும் சூழலில் அவ்வகை திட்டங்களை அக்கா பலமாக எதிர்த்து வந்தார். நான் அக்காவின் அரசியல் மற்றும் நிர்வாக விஷயங்களில் எப்போதும் தலையிட்டதே இல்லை. அக்காவே அதிகாரிகளை அழைத்து விவாதித்து உரிய ஆலோசனைகளை வழங்குவார்.

கட்சி ரீதியான விஷயங்கள்
கட்சி ரீதியான விஷயங்களை என் மூலமாக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அக்கா விவரம் கூற சொல்வார். அக்காவின் அறிவுறுத்தலின் பேரில் அது போன்ற கட்சி ரீதியான விஷயங்களில் நான் செயல்படுவேன். தமிழக மக்களின் நலனை பேணி பாதுகாக்க தனது உடல்நிலையை சற்றும் பொருட்படுத்தாமல் அக்கா தனது அயராத பணியின் காரணமாக தமிழக முதல்வராக சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

தளராத மனம்
அக்கா அதிக மன உறுதியும், தளராத மனமும் பிடிவாத குணமும் கொண்டவர். தான் எடுத்த முடிவிலிருந்து அதிகம் மாறாதவர். நான் என்னால் இயன்றவரை அக்காவின் நலனை பேணி பாதுகாக்க என் வாழ்க்கையையே அர்ப்பணித்தவள். 2014 இறுதிக்கு பிறகு அக்கா உடல்நலமில்லாமல் போன விஷயம் அக்கா அவர்களிடம் பணியாற்றிய அனைத்து அதிகாரிகள் காவல் துறை தனிபாதுகாப்பு அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் போன்ற அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

ரத்த அழுத்தம்
அக்காவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி போன்ற பிரச்சினைகள் இருந்து வந்ததால் நானும் அக்காவும் மூன்று மாதத்திறகு ஒரு முறை அப்பல்லோ மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் தொடர்ந்து எடுத்து வந்தோம். அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் செல்வார்கள். இவ்வாறு சசிகலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஆதிக்கம்
சசிகலாவின் குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக ஆதிக்கம் செலுத்தினர் என்பது ஊரறிந்த விஷயம். சசிகலா கை காட்டும் நபருக்கே வார்டு கவுன்சிலர் பதவி முதல் அமைச்சர் பதவி வரை கிடைக்கும் என்பதும் அவரிடம் அதிமுக நிர்வாகிகள் விசுவாசமாக இருந்தனர். சசிகலா குடும்பத்தினரால் கொங்கு மண்டலத்தில் நிறைய நிர்வாகிகள் கோலோச்சினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications