சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பின்னணியில் சசிகலா?
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற போட்டியின் பின்புலத்தில் சசிகலா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி தேர்வு செய்யவே நேற்று முன் தினம் மாலை அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றால் விஜயபாஸ்கரும் உடல்நல பாதிப்பால் வைத்திலிங்கமும் வரவில்லை.
இவர்கள் இருவரை தவிர மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ரகசிய ஆலோசனை நடத்தினர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி, தன்னை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறினார்.

எதிர்ப்பு
இதற்கு உடனே பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். தென் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிமுக தோல்வியுற்றதற்கு எடப்பாடியே காரணம் என்றும் அவர் எடுத்த இடஒதுக்கீடு பிரச்சினையே காரணம் என்றும் ஓபிஎஸ் சரமாரியாக எடப்பாடி மீது குற்றம்சாட்டினார்.

கொங்கு மாவட்டங்கள்
அது போல் எடப்பாடியும், கொங்கு மாவட்டங்களில் அதிக எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். இதனால் என்னை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்வதுதான் நியாயம். தென் மாவட்டங்களில் பல எம்எல்ஏக்கள் தோற்றதற்கு நீங்கள்தான் காரணம் என எடப்பாடியும் ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

சசிகலா
அதிமுகவில் ஜெயித்த 65 எம்எல்ஏக்களில் ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா ஆதரவாளர்கள் உள்ளார்கள். நேற்று முன் தினம் முடிவு எதுவும் எட்டப்படாததால் நாளை இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் மீண்டும் நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் சசிகலா இறங்கிவிட்டதாகவே நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிமுக
அதாவது அரசியலிலிருந்து ஒதுங்குவதாக கூறி அதிமுக தோற்றவுடன் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பிரச்சினையை கிளப்பி அதன் மூலம் அதிமுகவை கைப்பற்ற சசிகலா பக்கா பிளான் செய்துள்ளார் என்கிறார்கள். இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டு தர வேண்டாம் என ஓபிஎஸ்ஸை பின்னால் இருந்து இயக்குவதும் சசிதான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications