என்னதான் நினைக்கிறார் சசிகலா?.. க்ரீன் சிக்னல் காட்டிவிட்டதா டெல்லி மேலிடம்.. கொங்கிற்கு குறி!
சென்னை: அதிமுகவை எப்படியாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று சசிகலா வேகமாக முன்னெடுப்புகளை செய்து வருகிறார். சசிகலா எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால் அவருக்கு டெல்லி மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதிமுக கட்சிக்குள் கடந்த 2 மாதமாகவே ஏகப்பட்ட மாற்றங்கள், அதிரடிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இனி சசிகலா அதிமுகவிற்குள் வர வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில்தான் தற்போது சசிகலா கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவினர் மத்தியில் கவனம் பெற்று வருகிறார்.
முதலில் வெறும் போன் கால் ஆடியோக்களை மட்டும் வெளியிட்டு வந்த சசிகலா கடந்த சில நாட்களாக எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதி விசிட், தென் மாவட்ட சுற்றுப்பயணம், குரு பூஜை பங்கெடுப்பு என்று தீவிரமாக அரசியல் செய்து வருகிறார்.

அதிமுகவில் மோதல்
இன்னொரு பக்கம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் கட்சியில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்தான் முடிவு எடுக்கும். யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்று சசிகலாவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். கட்சியில் சசிகலாவை கொண்டு வருவதற்காக ஓ பன்னீர்செல்வம் கொடுத்த சிக்னலாக இது பார்க்கப்படுகிறது.

தனியாக மீட்டிங்
கட்சிக்குள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், அவரது ஜாதியினர் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் சசிகலா வந்தால் தனக்கு ஆதரவாக இருப்பார், தன் கை ஓங்கும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைப்பதாக தோன்றுகிறது. அதோடு சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் தனியாக மீட்டிங்கும் நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் பாஸ்கரன் ஆகிய முக்கிய தலைவர்களுடன் ஓ பன்னீர்செல்வம் மீட்டிங் நடத்தினார்.

எழுச்சி
இது முல்லைப்பெரியாறு தொடர்பான மீட்டிங் என்று கூறினாலும் ஓ பன்னீர்செல்வம் நடத்திய இந்த மீட்டிங்கில் ஏன் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை என்பது பெரிய கேள்வியாகி உள்ளது. கண்டிப்பாக இதில் வேறு விஷயங்களை பேசி இருப்பார்கள். கட்சிக்குள் மீண்டும் சசிகலாவை கொண்டு வருவது குறித்து இதில் பேசி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. சசிகலாவிற்கு ஆதரவாக கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகள் மாற தொடங்கி உள்ளது.

சசிகலாவும் விடவில்லை
இன்னொரு பக்கம் சசிகலாவும் விடாமல் அதிரடி பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் குரு பூஜையில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். தனது சமுதாய மக்களிடையே சசிகலாவின் இமேஜ் இதனால் உயர்ந்துள்ளது. அதிமுகவில் குறிப்பிட்ட சில சமூகத்தினர் சசிகலா பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சாய தொடங்கி உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இன்றும் கூட சசிகலா தீபாவளி வாழ்த்தை அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் வெளியிட்டு இருந்தார்.

ஆதரவு பெருகுகிறது
நான் அதிமுக பொதுச்செயலாளர்.. இதுதான் நிதர்சனம் என்று சொல்வது போல சசிகலா இந்த வாழ்த்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். சசிகலாவின் சளைக்காத அரசியல் மூவ், ஓ பன்னீர்செல்வமின் பேட்டிகளை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு நாட்களாக அமைதியாகி உள்ளார். முக்கியமாக குரு பூஜைக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி பெரிதாக அரசியல் ஸ்டேட்மெண்ட் எதையும் கொடுக்கவில்லை.

கண்டுகொள்ளாத பாஜக
சசிகலாவின் தொடர் செயல்பாடுகளை பார்த்து டெல்லி பாஜக மேலிடத்தின் முழு ஆதரவு அவர் பக்கம் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் இப்போதெல்லாம் டெல்லி பாஜக மேலிடத்தின் ஆதரவு இன்றி எதுவும் நடப்பது இல்லை என்றே கூறப்படுகிறது. அப்படி இருக்கும் போது சசிகலாவின் இந்த செயலுக்கு பின்பும் டெல்லி மேலிடம் இருக்க வாய்ப்புள்ளது.

பாஜக பிளான் இதுவா?
முக்கியமாக கொங்கில் பாஜகவை வலுப்படுத்த டெல்லி மேலிடம் எடுக்கும் மூவ் இதுவோ என்றும் பார்க்கப்படுகிறது. அதிமுகவின் கொங்கு ஆதிக்கத்தை குறைத்தால்தான் அங்கு பாஜக விஸ்தாரமாக வளர முடியும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அண்ட் கோவிற்கு செக் வைக்கப்பட்டுள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் கொங்கு ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்பதால் சசிகலாவை எடப்பாடிக்கு எதிராக பாஜக வளர்த்துவிடுகிறதோ என்ற கேள்வியும் அரசியல் வல்லுநர்கள் தரப்பில் வைக்கப்படுகிறது.

கொங்கு முன்னேற்றம்
கொங்கில் பாஜக கொஞ்சம் வலுவாக உள்ளது. அங்கு அதிமுகதான் இப்போது நம்பர் 1. ஒருவேளை அதிமுகவின் பவரை அங்கு குறைத்தால் கொங்கு பாஜக வசம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. இதனால் கொங்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை காலி செய்யும் மூவ்கள் செய்யப்பட்டு வருகின்றனவோ என்ற கேள்வியும் அரசியல் வல்லுநர்கள் தரப்பில் வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications