போயஸ் கார்டனிலிருந்து ஜெ. என்னை வெளியேற்றியது மக்களை நம்ப வைக்கதான்- சசிகலா பேட்டி! சோ பற்றி ஆதங்கம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தனக்கு இடையேயான உறவு எப்படிப்பட்டது என்பது பற்றி மனம் திறந்துள்ளார் சசிகலா.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்த சசிகலா, தற்போது மறுபடியும் மக்களை சந்திக்கப் போவதாக அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உறுதிமொழி அளித்து வருகிறார்.
சசிகலாவின் மறு அரசியல் பிரவேசம் அதிமுகவில் எந்தமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், தி வீக் என்ற ஆங்கில வார இதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் சசிகலா.
பலரும் இதுவரை அறிந்திராத பல சுவாரசிய தகவல்களை சசிகலா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். குறிப்பாக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றிய நிகழ்வுகள் நடந்தன எப்படி நடந்தன என்பது பற்றி அவர் மனம் திறந்துள்ளார். இதோ அவரது பேட்டியிலிருந்து..

பிரிந்து இருக்க மாட்டார்
"நான் 33 வருடங்கள் போயஸ்கார்டன் இல்லத்தில் வாழ்ந்து இருக்கிறேன். அக்காவுக்கு தெரியாமல் வீட்டை விட்டு நான் வெளியே போனது கிடையாது. நான் வீட்டில் சில நிமிடங்களில் இல்லை என்றாலும் உடனடியாக நான் எங்கே இருக்கிறேன் என்று தொலைபேசியில் அழைத்து விசாரிப்பார் . அக்கா இல்லாமல் நான் வெளியே போனால் அது சென்னையில் உள்ள மிலன் ஜோதி ஷோரூம் கடைக்காகத்தான் இருக்கும். அவருக்கு பிடித்தமான பச்சை நிற புடவைகளை வாங்கி வருவேன். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இரு டெய்லர்கள் சேலைக்கு எம்ப்ராய்டரி அடித்து கொடுப்பார்கள் . அக்கா எப்போதுமே அதிகப்படியாக நகைகள் அணிவதை விரும்பமாட்டார். மிகவும் சிம்பிளாக இருக்க விரும்புவார்.

கொடநாடு கொலை
செல்லப்பிராணிகள் என்றால் அக்காவுக்கு ரொம்ப பிடிக்கும் 13 நாய்கள் போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்தன. அதில், ஜூலி என்ற நாயை ரொம்பவே பிடிக்கும். ஜூலி நாய் இறந்த போது ஜெயலலிதா ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு சென்று பாஜக தலைவர் அத்வானியை சந்திப்பதாக இருந்தது. ஆனால் ஜூலி இறந்த தகவல் தெரிந்ததும் அந்த பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பிவிட்டார். நாய்களுக்கு அவரே உணவு அளிப்பார். சில நேரங்களில் காலை வாக்கிங் செல்லும்போது நாய்களை உடன் கூட்டிச் செல்வார். கடற்கரைகளில் வாக்கிங் செல்வதும் மகாபலிபுரம் செல்வதும் அக்காவுக்கு ரொம்ப பிடிக்கும். அதைவிட அதிகமாக கோடநாடு எஸ்டேட் அவருக்கு பிடிக்கும். அங்கே படகு சவாரி செய்வதும், நடை பயிற்சி செய்வதும் அக்காவால் விரும்பப்படும். அப்படிப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை மற்றும் கொலைகள் அடுத்தடுத்து நடந்துள்ளன. அது ஒரு சதிச்செயல் என்று தெரிகிறது. முந்தைய அதிமுக அரசு இந்த வழக்கை உரிய முறையில் விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து இருக்கலாம்." என்று கூறும்போது சசிகலா கண்கள் லேசாக பனித்துள்ளன.

சசிகலா குடும்பம் மீது குற்றம் சொன்ன ஜெயலலிதா
சசிகலா இரண்டு முறை அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். 1996 முதல் 1997 வரை திமுக ஆட்சி காலத்தில் அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு இன்னமும் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஜெயலலிதாவும் கைது செய்யப்பட்டார். ஆனால், 45 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, "சசிகலா குடும்பம் தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம்" என்று ஜெயலலிதா நேரடியாக குற்றம் சாட்டினார் . இவ்வாறு நடைபெற்ற சில மோதல்கள் பற்றியும், போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றியது பற்றிய கேள்விக்கும் பதிலளித்துள்ளார் சசிகலா.

போயஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றியது சும்மாதான்
என்னை விட்டு ஒரு நிமிடம் கூட அக்காவால் பிரிந்து இருக்க முடியாது. என்னை போயஸ் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றுவது வெளியுலகத்திற்காக மட்டும்தான் . ஆனால் நான் வேறு இடத்தில் இருந்தாலும், தினசரி தொலைபேசியில் இருவரும் பேசிக் கொள்வோம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது . அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். இந்த செய்தியை கேள்விப்பட்டதும் ஜெயலலிதா மிகவும் அதிர்ச்சி அடைந்தார். மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். டாக்டர்களிடம் தொடர்ந்து என்னுடைய உடல் நலம் பற்றி பதட்டத்தோடு விசாரித்துக் கொண்டே இருந்தார், என்று தெரிவித்துள்ளார் சசிகலா.

அப்போதே சொன்ன கருணாநிதி
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போயஸ் இல்லத்தில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டார். சரியாக 100 நாட்கள் கழித்து மார்ச் மாதம் மீண்டும் போயஸ் இல்லம் வந்தார். ஜெயலலிதாவிடம் பகிரங்கமாக சசிகலா மன்னிப்பு கேட்டதால் அவர் மீண்டும் போயஸ் இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டதாக ஜெயலலிதா தரப்பு கூறியது. மன்னார்குடியில் உள்ள தனது சொந்தங்கள் யாரையும் போயஸ் கார்டன் இல்லத்தில் அனுமதிக்க மாட்டேன் என்றும் சசிகலா அப்போது உறுதி அளித்தார். இதுபோன்ற செயல்பாடுகள் வெளி உலகத்தை ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட நாடகம் என்பது போல சசிகலா இப்போது அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த காலகட்டத்தின் போதே இது போன்ற நாடகங்களை நான் நம்ப மாட்டேன் என்று திமுக தலைவராக இருந்த கருணாநிதி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

மக்களை நம்ப வைக்க திட்டமிட்ட செயல்
சசிகலா தனது பேட்டியை மேலும் தொடர்கையில் "மக்களை நம்ப வைப்பதற்காக கட்சியிலிருந்து நான் நீக்கப்பட்டேன். தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் என்னை தங்க சொல்லி அறிவுறுத்தியதே ஜெயலலிதாதான். இது எல்லாமே திட்டமிடப்பட்ட செயல்கள். தனித்தனியாக இருந்தாலும், தினமும் இரவு 8 மணி அளவுக்கு இருவரும் போன் பேச ஆரம்பித்தால், நள்ளிரவு வரை எங்கள் உரையாடல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் என்னோடு அவர் விவாதிப்பது வழக்கம். மறுபடியும் போயஸ் இல்லத்திற்குள் செல்வதற்காக, மன்னிப்பு கேட்பது போல ஒரு தகவலை வெளியிட சொன்னதும் ஜெயலலிதா ஐடியாதான். அதை சொல்லி நான் பழையபடி போயஸ் இல்லம் திரும்பிவிட்டேன்.

சோ ராமசாமி மீது குற்றச்சாட்டு
2011ஆம் ஆண்டு நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். சோ ராமசாமி மற்றும் உளவுத்துறை தலைவராக போலீஸ் அதிகாரி ஆகிய இருவரும்தான் அப்போது என்னை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதற்கு ஜெயலலிதாவுக்கு ஆலோசனை கூறியவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. நான் போயஸ் இல்லம் திரும்பிய பிறகு என்னதான் சோர்வான பணிகள் இருந்தாலும், அதை முடித்துவிட்டு என்னுடன்தான் ஜெயலலிதா, நேரத்தை செலவு செய்வார். எனது மடியில் அவர் படுத்து கிடப்பார். அப்போது, அவரைப் பார்ப்பதற்கு ஒரு சின்ன குழந்தை மாதிரி தெரியும். இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications