Sasikala: புதிய கட்சி தொடங்குறேனா? ஜெயலலிதா நினைவிடத்தில் சஸ்பென்ஸ் வைத்த சசிகலா
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா "நாளை நல்ல தகவலை சொல்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, புதிய கட்சி தொடங்குகிறாரா என்ற நேரடி கேள்விக்கு, "நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நல்ல தகவலை சொல்கிறேன்" பதிலளித்தார். இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

சசிகலா நேரடியாக ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லாமல், "மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு முடிவெடுப்பேன். அம்மா ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணிப்பேன். நாளை நடக்கும் நிகழ்வுக்காக ஆசிவாங்க வந்துள்ளேன்" என்றார். மேலும் மக்களின் ஆதரவு இருந்தால் எதுவும் சாத்தியம் என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாகவே சசிகலா புதிய கட்சி தொடங்க உள்ளார் என்ற தகவல்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அங்கு கட்சியின் பெயர், கொடி, கொள்கை அறிவிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆதரவாளர்கள் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி, மேடை அமைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தென் தமிழகத்தில், குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியில் சசிகலாவுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து அல்லது கூட்டணியில் களமிறங்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது.
சில வட்டாரங்களில் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற யூகமும், அதிமுக அல்லது அமமுகவில் இருந்து பலர் இணையலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இருப்பினும் அதிமுகவில் இணைய முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தனி அணியாக செல்வது தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது.
அவரது ஆதரவாளர்கள் "சின்னம்மா" 2026-ல் ஆட்சி அமைப்பார் என்று தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இன்றைய பேட்டி மற்றும் நாளை நடைபெறவுள்ள பசும்பொன் நிகழ்ச்சி தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது மீண்டும் வெறும் வதந்திகளாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலாவின் அடுத்த நகர்வு தமிழக தேர்தல் களத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் அதிமுக என்ற இயக்கத்தை அண்மையில் தொடங்கியுள்ளார். அது போல் சசிகலாவும் அம்மா அதிமுக என்ற கட்சியை தொடங்குவார் என்கிறார்கள்.
ஆனால் டிடிவி தினகரனோ ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய 6 மாதங்களாவது ஆகும். 3 மாதங்களில் கட்சியை தொடங்க முடியாது என சசிகலாவின் பெயரை குறிப்பிடாமல் அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications