அன்புக்கு நான் அடிமை... தீவிர அரசியலில் ஈடுபடுவேன் - சசிகலா உறுதி
தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சசிகலா கூறியுள்ளார். உங்கள் அன்புக்கு நான் அடிமை என்றும் சசிகலா கூறியுள்ளார்.
சென்னை: தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை என்று கூறியுள்ள சசிகலா, அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அன்புக்கு நான் அடிமை என்று கூறியுள்ள சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையான சசிகலா கொரோனா தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு இன்று சென்னை திரும்பினார். பெங்களூருவில் இருந்தே அமமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணித்த சசிகலா திடீரென்று வாகனம் மாறினார். காரில் அதிமுக கட்சி கொடியை கட்டியிருந்த சசிகலாவிற்கு காவல்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். அதையும் மீறி காரில் கொடியுடன் பயணித்தார் சசிகலா.

மாரியம்மன், பிரத்யங்கிரா தேவி
ஓசூரில் மாரியம்மன் கோவிலில் வழிபட்ட சசிகலா, பிரத்தியங்கிரா தேவி கோவிலிலும் வழிபட்டார். கோவிலில் சசிகலாவிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சசிகலா வரும் வழியெங்கும் தொண்டர்கள் மேளதாளம் முழங்கியது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பூ மழை தூவி வரவேற்பு கொடுத்தனர்.

சசிகலா பேச்சு
கிருஷ்ணகிரி கத்திக்குப்பத்தில் தன்னை வரவேற்க காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, தொண்டர்கள், தமிழக மக்களின் அன்புக்கு நான் அடிமை என்று உருக்கமாக கூறினார். அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்று தெரிவித்த சசிகலா, அன்புக்கு நான் அடிமை... தமிழ் பண்புக்கு நான் அடிமை என்று எம்ஜிஆரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார் சசிகலா.

தீவிர அரசியலில் ஈடுபடுவேன்
கொடியை பயன்படுத்தியதற்காக அமைச்சர்கள் புகாரளித்தது அவர்களின் பயத்தை காட்டுகிறது என்று தெரிவித்த சசிகலா, விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

ஒருதாய் பிள்ளைகள்
ஜெயலலிதா நினைவிடம் எதற்கு மூடப்பட்டது என்று தெரியும் என்று கூறிய சசிகலா விரைவில் அனைவரையும் சந்திப்பேன் என்று கூறினார். அதிமுக பல சோதனைகளை சந்தித்த போதும் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வந்துள்ளது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என்றும் சசிகலா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications