சோலி முடிஞ்சு.. எடப்பாடிக்கு எல்லா பக்கமும் அடி! அய்யா - சின்னம்மா கூட்டணியால் சிதறும் அதிமுக கோட்டை
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு பிரதான போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர். கூடுதலாக தவாக வேல்முருகன், சசிகலா - ராமதாஸ் கூட்டணியும் களத்தில் இருக்கிறது. இதில் திமுக அதிமுக இடையே தான் போட்டி என்றாலும், பிறர், பிற கட்சிகளின் வாக்கு வங்கியை கடுமையாக பாதிப்பார்கள் என சொல்லப்படுகிறது.
அந்த வகையில் சசிகலா ராமதாஸ் அமைத்துள்ள கூட்டணி எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர். மேலும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பறிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலிருந்து விலகிய சசிகலா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி 'அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
2026 சட்டசபை தேர்தல்
அதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். மறுபுறம், பாமகவில் அன்புமணி ராமதாஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ராமதாஸ் தனி அணியை உருவாக்கியிருப்பதும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல முனைப் போட்டி நிலவுகிறது.
சசிகலா-ராமதாஸ் கூட்டணி
இந்த சூழலில் சசிகலா-ராமதாஸ் கூட்டணி நேரடியாக வெற்றியை எதிர் நோக்காமல், குறிப்பிட்ட சமூக வாக்குகளைப் பிரிக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் தேவர் சமூகத்தை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த சமூகத்தினர் முன்பு அதிமுகவுக்கு முக்கிய ஆதரவாக இருந்தவர்கள் என்பதால், அந்த வாக்குகள் பிளவுபட்டால் அதிமுகக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக வாக்கு பிளவு
சசிகலா தனது கட்சி சார்பில் சுமார் 75 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், அதில் பாதிக்கும் மேற்பட்டோர் தேவர் சமூக வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதேபோல், வட தமிழகத்தில் வன்னியர் சமூக வாக்குகளை குறிவைத்து ராமதாஸ் தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். குறிப்பாக, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் வன்னியர் சமூகத்தின் ஆதரவைப் பெறும் நோக்கில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அதிமுக கூட்டணி
அன்புமணி அதிமுக கூட்டணியில் இருப்பதால், அவருக்கு எதிராக ராமதாஸ் நடத்தும் பிரசாரம், அதிமுக வாக்குகளில் சிதறலை ஏற்படுத்தக்கூடும் என்ற கணிப்பும் முன்வைக்கப்படுகிறது. இதனுடன், கே. கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும் பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தற்போது திமுக அணியில் இணைந்து செயல்படுவதும் அதிமுகவுக்கு எதிரான சூழலை உருவாக்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது.
வாக்கு வங்கி பாதிப்பு
தமிழகத்தில் பலமுனைப் போட்டி நிலவும் சூழலில், சில நூறு அல்லது ஆயிரம் வாக்குகள் கூட பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமாக இருக்கலாம். குறிப்பாக 2021 தேர்தலில் பல தொகுதிகளில் வெற்றி வாக்கு வித்தியாசம் 3,000-க்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பார்க்கும்போது, சசிகலா - ராமதாஸ் கூட்டணி நேரடியாக ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பலம் பெறுமா என்பது சந்தேகம் தான்.
எடப்பாடி பழனிசாமி
இருந்தாலும், அதிமுக வாக்குகளைப் பிரித்து தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் முக்கிய அம்சமாக உள்ளது. அந்த வகையில் சசிகலா ராமதாஸ் அமைத்துள்ள கூட்டணி எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர். மேலும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பறிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றனர்.














Click it and Unblock the Notifications